Pages

Tuesday 4 October 2011

தடம் திரும்பா பிறழ்வுகள்


  தை நான் பார்த்திருக்கக்கூடாது!! அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்!! எல்லோரும் என்னையே குறை சொல்லுகிறார்கள்....என்னையறியாமல் அந்த விஷயம் என் கண்ணில் பட்டதற்கு நானெப்படி பொறுப்பாக முடியும்?? முழு சதவிகிதம் என் தவறல்லாத ஒரு விஷயத்திற்காக என்னை மட்டுமே எல்லோரும் திட்டுவது எந்த விதத்தில் நியாயம்??
 பைக்கை அரக்கபரக்க அரைகுறை ஸ்டாண்ட் போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தான் ரவி, கை கட்டி ஒரு ஓரமாக செய்வதறியாது திகைத்திருந்த என்னிடம்,
  "டேய் உனக்கு அறிவே கிடையாதாடா?? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?? இதெல்லாம் நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியாதா??

   வாய திறக்கிறானா பாருங்க!!  உறுமினான்...
  "டேய் என் தப்பு இல்லடா.....!
 "மூடு ..இனி ஒரு வார்த்தை பேசாத...!

 அடப்பாவி அதைத்தானே நான் இவ்வளவு நேரமும் செய்துக்கிட்டிருந்தேன்?! மனதிற்குள் தான்!!

வருகிறவனெல்லாம் எனக்கு இலவச அர்ச்சனை செய்வதும், அப்படியே நாலடி நடந்து ஐ.சி.யூ-வை எட்டிப்பார்த்து உச்சுகொட்டிவிட்டு தீவிர ஆலோசனையில் ஆழ்வதுமாக இருந்தனர். நான் மட்டும் சுவற்றோடு ஒட்டி , கூனி குறுகி!!
 ராமனுக்கு சீரியஸ்!! இதுவும் கூட இங்கே கூடிய கூட்டத்திற்கு காரணங்களில் ஒன்று....இன்னொன்று என்னை திட்டி தீர்ப்பதற்காக இருக்கலாம்!! 
                                     ---------------------------------------------------------------
  அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது, எழுந்திருந்து ஜலக்கிரிடையை முடித்துக்கொண்டு, அறைக்குள் வருகையில் நின்றிருந்தான் சுரேஷ். 
    "மச்சி குளிச்சிட்டு வந்துடுறேண்டா, இந்தா என் போனை சார்ஜ்ல போட்டிருக்கேன் பாரு ...ஏதாச்சும் கால் வந்தா எடுக்காத! சொல்லிதொலைத்தவன் போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு போயிருந்தாலும் பரவாயில்லை....
  அவன் போன மூன்றாவது நிமிடம் போன் அலறியது! நான் கண்டுக்கொள்ளவில்லை...

  ரெண்டு நிமிட இடைவெளியில் மீண்டும் அழைப்பு! 

 இன்னொரு முறை என்னால் இந்த சத்தத்தை சகிக்க முடியாது! இம்முறை போனை கையிலெடுத்தேன்.....அவன் வீட்டிலிருந்து அழைப்பு........லைன் துண்டிக்கப்பட்டதும் ஸ்கிரீனை பார்த்தேன்..... புது மெசேஜ் ஒன்று....ஃப்ரம் "டியர்"...என்றிருந்தது....அப்படியே வைத்துவிட்டிருக்கலாம்....ஆனால் ஏதோ ஒரு உந்துதலில் ஓபன் பண்ணிவிட்டேன்....அதை நான் செய்திருக்கக்கூடாது!!
                             ------------------------------------------------------------------
  எல்லோரும் இயல்பாகத்தானிருந்தார்கள்....எனக்கு தான் நிம்மதி வறண்டுவிட்டிருந்தது! இதில் எல்லோரும் ஏதோ தவிப்பிலிருப்பது போல ஒரு பிரமை வேறு! வகுப்பே சிரித்து திமிலோகப்பட்டுக்கொண்டிருக்க எனக்கு அந்த இடைவேளை நேரம் கூட சுமையாகி விட்டிருந்தது. நான் ஏன் வருத்தப்பட வேணும்?? எனக்கு என்ன வந்துச்சு?? வருத்தப்பட வேண்டிய ராமனே என்னருகில் உட்கார்ந்து சத்தம் போட்டு சிரித்துக்கொண்டிருக்கிறான்! இரண்டு பெஞ்ச் தள்ளி சுரேஷ்...!
  ராமனுக்கு லவ் ஃபெயிலியர்...! முதலாமாண்டிலிருந்தே தீவிரமாக என் வகுப்பு பெண்ணை காதலித்து வந்தான்...அவளும் கூட....
 எல்லோரும் இவர்களின் காதலை வியந்து பாராட்டினாலும் ஆரம்பம் முதலே எனக்கு இதில் உடன்பாடே இல்லை...இங்கு உடன்பாடு என்பது..இவர்கள் சின்சியராக காதலித்தார்கள் என்பதில் உடன்பாடில்லை எனும் பொருள் பெறுகிறது.
அட்மிஷன் போட்ட மூன்றாவது நாள் முளைத்த காதலிது. வருகைபதிவேட்டில் இவர்களிருவரது பெயர் உறுதியாவதற்கு முன்பே வகுப்பு சகாக்கள் இவர்களது காதலை உறுதிப்படுத்திக்கொண்டு கேன்டீனிலும்,கஃபேயிலுமாக மாறி மாறி ஆற்றிக்கொண்டிருந்தார்கள்.அவளது பெயர்?? அவளது பெயரை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு கெட்டவார்த்தையும் சேர்ந்தே வருகிறது!

  சொந்த ஏர்செல்லிலும், ஓசி ஏர்டெல்லிலும், குளிக்கப்போயிருந்த நண்ப,நண்பிகளின் பி.எஸ்.என்.எல்லிலும் காதலை ஜோராக வளர்த்தார்கள்... தெரு தெருவாக சுற்றுவதும், வகுப்பில் ஒரே ரொமாண்ஸுமாக ஒரே தொல்லை! ஒரே வாரத்தில் மொபலில் இருந்த ஆயிரம் ரூபாயை பேசி தீர்த்திருப்பதாக கஃபேயில் காபி குடித்துக்கொண்டிருக்கும்போது சொல்லி மார்தட்டிக்கொண்டான் ராமன்.நான் எதுவும் பேசவில்லை....உனக்கு பொறாமை என்றான்! நினைத்துக்கொள்ளட்டுமென 
 விட்டுவிட்டேன்.
     மூன்றாம் செமஸ்டர் வருவதற்கு முன்னமே நான் எதிர்பார்த்தது நடந்தது....செல்லம், வைரம், புஜ்ஜு எனக்கொஞ்சிக்கொண்டிருந்தவர்கள், குழாயடி தண்ணிக்கு சண்டைபோடுவதைப்போல போனிலேயே சிண்டு முடிய ஆரம்பித்தார்கள். 

 நேருக்கு நேரான பெஞ்ச்களில் மட்டுமே உட்கார்ந்து ரொமாண்ஸ் பண்ணும் பழக்கம் கூட புளித்துவிட்டிருக்க வேண்டும்!இப்போதெல்லாம் "அவள்" இவனை முறைக்க கூட கடைசி பெஞ்சை நோக்கி கழுத்தை திருப்ப வேண்டியிருந்தது .

  அவர்கள் காதலின் ஆரம்ப துளிர்ப்பு நிலை வலுப்பெற காரணமான நண்பர்கூட்டம் இப்போது எங்கே என்றே தெரியவில்லை! ஆனால் நான் வழக்கம் போல அவனோடு பேசி ,பாவித்திருந்தேன்.
                                      ----------------------------------------------------------------
 ஒரு மாதத்தில் எல்லாமும் முடிந்துவிட்டிருந்தது. ஆரம்பத்தில் அவளைப்பற்றியே பேசி சலிப்பான் ராமன்.இப்போதெல்லாம் மறந்துவிட்டிருந்தான் நடைபாதை கடைகளில் அவள் பெயரை பார்க்கும் போது கூட என்னிடம் கதையளக்காமல் கடந்து செல்லுமளவுக்கு! எப்போதாவது அவள் ஞாபகம் வந்தால் புகைவிட்டு மழுங்கிப்போகச்செய்துகொள்கிறான் . எப்படியோ எனக்கு தொல்லையில்லாமல் கடந்தன இரண்டு வாரங்கள்! ஆங் என் இன்னொரு நண்பனான சுரேஷ் பற்றி 
 சொல்ல மறந்தேவிட்டேனே...அவனும் எனக்கு ராமனை போல நெருக்கம் தான். என்னைவிட ராமனுக்கு ரொம்பவும் நெருக்கம்! "அவளும்,இவனும்,அவனும் கூட ஒன்றாக பேசி சிரித்திருக்கிறார்கள். ஏன் காதலை கைவிட்டானென நான் கேட்டதேயில்லை...அவனும் சொல்லவில்லை....
                                                     -----------------------------------
காலேஜ் முடிந்து பேருந்து பிடிக்க வேண்டிய அவசரத்தில் இருந்த நான் கால்குலேட்டரை பெஞ்சிலேயே விட்டுவிட்டதை பஸ்ஸ்டாப்பில் தான் உணர்ந்தேன். 
 ராமனை காத்திருக்கசொல்லிவிட்டு வேகவேகமாக ஓடிப்போய் பார்த்தால் கதவு பூட்டியிருந்தது. திகைத்துப்போய் துப்புரவு ஆயாவை அணுகினால் இன்னும் ரூமை பூட்டலப்பா போய் பாரு என்றாள். அட ஆமாம் கதவு சும்மா தான் சாத்தியிருந்தது.! ஒரு தள்ளு தள்ளினேன் ...உள்ளே நான் கண்ட காட்சி...........................
                                         ----------------------------------------------------------

 அந்த காட்சியே நான் "அவளை" அந்த கெட்டவார்த்தையோடு விளிப்பதற்கு காரணமாக அமைந்திருந்தது! அந்த சம்பவம் எனக்குள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.  அவரவர் விருப்பம் ...நான் ஏன் திட்ட வேணும்?? எவள் எவனோடு போனால் எனக்கென்ன?? நானாக திட்டவில்லை....அமைதியாக இதெல்லாம் சகஜம் தானென எண்ணி விட்டுவிட்டேன்.ஆனால் அந்த விளித்தலை நியாயப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது..
  அன்றிரவு தூக்கம் வராமல் நான் புரண்டு படுத்தாலும் அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது, எழுந்திருந்து ஜலக்கிரிடையை முடித்துக்கொண்டு, அறைக்குள் வருகையில் நின்றிருந்தான் சுரேஷ். 
    "மச்சி குளிச்சிட்டு வந்துடுறேண்டா, இந்தா என் போனை சார்ஜ்ல போட்டிருக்கேன் பாரு ...ஏதாச்சும் கால் வந்தா எடுக்காத! சொல்லிதொலைத்தவன் போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு போயிருந்தாலும் பரவாயில்லை....
  அவன் போன மூன்றாவது நிமிடம் போன் அலறியது! நான் கண்டுக்கொள்ளவில்லை...

  ரெண்டு நிமிட இடைவெளியில் மீண்டும் அழைப்பு! 

 இன்னொரு முறை என்னால் இந்த சத்தத்தை சகிக்க முடியாது! இம்முறை போனை கையிலெடுத்தேன்.....அவன் வீட்டிலிருந்து........லைன் துண்டிக்கப்பட்டதும் ஸ்கிரீனை பார்த்தேன்..... புது மெசேஜ் ஒன்று....ஃப்ரம் "டியர்"...என்றிருந்தது....அப்படியே வைத்துவிட்டிருக்கலாம்....ஆனால் ஏதோ ஒரு உந்துதலில் ஓபன் பண்ணிவிட்டேன்....அதை நான் செய்திருக்கக்கூடாது!!
 மூன்று வினாடி பிராஸஸுக்கு பிறகு இப்படியாக விரிந்தது அந்த குறுஞ்செய்தி,
  "சுரேஷ் அந்த சிவா (நான் தான்) நேத்து சாயங்காலம் என்கிட்ட புரஃபோஸ் பண்ணுறாண்டா!!
அடுத்த மெசேஜ்,
   "சுரேஷ் செல்லம் எங்க போய்ட்ட...அவனை என்ன பண்றது?? நான் என்னோட நோட் எடுக்க கிளாஸுக்கு போனப்போ இப்படி பேசுறான்!ஆனா நான் கண்டுக்கலை...எனக்கு நீ தாண்டா செல்லம் எல்லாமே...எனக்கு நீ தான் முக்கியம் ...அவன் நான் கிடைக்காத கோவத்தில உன் கிட்ட வந்து என்னை மத்தவங்களோட பார்த்ததா கூட சொல்லுவான் நம்பிடாதடா செல்லம்..உம்ம்மாமா "
  "நீ அவன்கிட்ட கேக்காத ,,,நானே பாத்துக்குறேன்...என்ன பண்ணட்டும் சொல்லு!
 "ரிப்ளை மீ மீ மீ மீ ",
அடுத்தடுத்த மெசேஜ்களில் என் ரத்தம் கொதிநிலையை அடைந்துவிட்டிருந்தது....
அடி "______________________________" என கத்திவிட்டேன் என் பொறுமையை மீறி......
பின்னாலேயே ராமன் நின்றிருந்ததை நான் கவனிக்கவில்லை....நான் "அவளை" திட்டியதை நியாயப்படுத்த உண்மைகளை உரைக்க வேண்டியாகிவிட்டது.
                                              ------------------------------------------------------

PRE-CLIMAX:
சொல்ல சொல்ல கேட்காமல் காலேஜ்க்கு லீவு போட்டான் ராமன். அவன் சுரேஷிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.அமைதியாக இருந்தான்.அவன் பக்குவத்தை எண்ணி வியந்துகொண்டே காலேஜை அடைந்தேன்.. ரூமில் தனியாக ராமன் இருந்தான்.


சரியாக மாலை ஐந்தரை மணிக்கு அழைப்பு அவசரமாக கே.எம்.சிக்கு வர சொல்லி...ராமன் என்னும் புண்ணாக்கின் பக்குவ நீட்சியை அசிங்க அசிங்கமாக திட்டியபடியே வந்து சேர்வதற்குள் எல்லோரும் கூடி விட்டிருந்தார்கள்...நான் உள்ளே போனதுமே சூழ்ந்துக்கொண்டு கன்னா பின்னாவென திட்டிதீர்த்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.என்ன மருந்தை ராமன் சாப்பிட்டதால் ஐ.சி.யூவில் வைத்திருக்கிறார்கள் என்று கூட யாரிடமும் கேட்க முடியாது!கொலை 
வெறியில் இருக்கிறான்கள் என்மேல் என் நிலையை சொன்னால் கேட்க வார்டு நர்ஸை தவிரவும் அங்கு யாரும் தயாராயில்லை.கூட்டத்திலிருந்து விலகி ஒரு 
ஓரமாக சுவரோரம் ஒதுங்கினேன்!   

  பைக்கை அரக்கபரக்க அரைகுறை ஸ்டாண்ட் போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தான் ரவி, கை கட்டி ஒரு ஓரமாக செய்வதறியாது திகைத்திருந்த என்னிடம்,
  "டேய் உனக்கு அறிவே கிடையாதாடா?? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?? இதெல்லாம்
நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியாதா??

வாய திறக்கிறானா பாருங்க!!  உறுமினான்...
  "டேய் என் தப்பு இல்லடா.....!

"மூடு ..இனி ஒரு வார்த்தை பேசாத...!

 அடப்பாவி அதைத்தானே நான் இவ்வளவு நேரமும் செய்துக்கிட்டிருந்தேன்?! மனதிற்குள் தான்!!

  வருகிறவனெல்லாம் எனக்கு இலவச அர்ச்சனை செய்வதும், அப்படியே நாலடி நடந்து ஐ.சி.யூ-வை எட்டிப்பார்த்து உச்சுகொட்டிவிட்டு தீவிர ஆலோசனையில் ஆழ்வதுமாக இருந்தனர். நான் மட்டும் சுவற்றோடு ஒட்டி , கூனி குறுகி!!இதிலும் குரு ரொம்பவும் எகிறினான்.அவன் தான் அன்று கால்குலேட்டர் எடுக்க   போகையில்..............................


   நேரமாக நேரமாக எனக்கு பதட்டம் கூடியது. சுமார் எட்டரை மணிவாக்கில் ராமன் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக சொன்னார்கள். அப்போது கூட எல்லோரும் உள்ளே சென்று பார்த்துவர...என்னை மட்டும் உள்ளேவிடமாட்டேன் என்றார்கள்.
 நான் இப்போதைக்கு ரூமுக்கு திரும்புவது தான் உசிதம். 


POST-CLIMAX:
     தூக்கம் வராமல் புரண்டு படுத்திருந்தேன்.சிந்தனையெல்லாம் நண்பர்களை  சமாதானப்படுத்தப்போகும் வழியையே எண்ணிக்கொண்டிருந்தது . மணி 12ஐ நெருங்குகையில்.  மொபைல் சினுங்கியது. நியூ மெசேஜ்!!  ஏதோ அன்னோவ்ன் நம்பரிலிருந்து!! திறந்தேன்..

 "சிவா செல்லம்...............என ஆரம்பித்து காதல் ரசம் தளும்பும் காக்டெயில் மெசேஜ் அது! என்ன சொல்ற நீ?? என்று முடிந்திருந்தது. 


                 இப்படிக்கு,
                  "அவள்"    
எனக்கும் கூட அந்த மெசேஜை திரும்ப ஒருமுறை படிக்க வேண்டும் போலிருந்தது!   

கடவுளாகும் சூட்சுமம்



   ன்னை நம்பக்கூடிய அளவு அறிவுள்ள ஜீவராசி பூமியிலேயே இல்லையோ என ஒருகணம் நினைக்க தோன்றியது.பிறகென்ன?  வெறுப்பாக இருக்கிறது! நான் கடைசியாக இந்த விஷயத்தை சொன்னது என் கண்ணில்பட்ட பதினெட்டாவது மனிதனிடம்! வழக்கம் போல அவனும் இதை சட்டை செய்யாமல் வராத எச்சிலை சிரமப்பட்டு ஒன்றுதிரட்டி அவனுக்கு பக்கவாட்டில் எனக்கு எதிர்திசையில் துப்பிவிட்டு ஏதும் பேசாமல் கடந்து போயிருந்தான்! அவனது எச்சில் விரவிய காற்றுபட்ட அந்த சிலவினாடிகள் மட்டும் அவமானம் வெகுண்டு நான் பார்த்தது பொய்யோ என மீண்டும் ஒருமுறை நினைக்க தொன்றியது...ச்சே வாய்ப்பே இல்லை...நிச்சயம் நானே என் கண்ணால் பார்த்த அதிசயம் அது..இருப்பினும்  நேரடியாக பார்த்த நானே இன்னும் முழுமையாக நம்பாத ஒரு விஷயத்தை சொன்ன மாத்திரத்திலேயே 18 பேர் நம்பிவிட வேண்டுமென எதிர்பார்த்தது என் முட்டாள்தனம் தான்..மீண்டும் ஒரு முறை காட்சிகளை மனதில் சம்பவிக்க விட்டு பார்த்தேன்.. வாய்ப்பே இல்லை....அவர் நிச்சயம் கடவுளே தான்..



யாருக்கும் வாய்த்திராத ஒரு அதிசயம் எனக்கு நடந்தது..! அமைதியாக அதே சமயம் அவசர அவசரமாக வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த என்னை வழிமறித்தது அந்த உருவம். கரும் நிறத்தில் சுமார் நாலரை அடி உயரத்தில் அசாதாரணமான தாடி மீசையுடன்...முதலில் ரொம்பவும் பயந்து தடுமாறிவிட்டேன். நகரமுடியாமலும், நம்ப முடியாமலும் நின்றிருந்த என் மன தடுமாற்றத்தை அவ்வுருவம் அறிந்திருக்க வேண்டும்...ஆனாலும் அவர் வாயை திறக்க முற்படவில்லை..சாந்தமான பார்வையுடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தார். பயம் விலகி..லேசாக ஒளிரும் அவரது சருமத்தை ஆச்சரியமாக பார்த்தபடி இருந்தேன். திடீரென என்ன நினைத்தாரோ தெரியாது. சிலபல ஜாலங்களை என் முன் நடத்திக்காட்டினார். ஊமை இருள் படரத்துவங்கிய அந்த நீண்ட நெடும் சாலையின் மங்கலான நிலவொளியில் அவரால் ஆல்ப்ஸ் மலைத்தொடரை கண்முன் வரவழைத்து காட்ட முடிந்தது,ஆப்பிரிக்க ஆதி இனம்,பிரபஞ்ச இயக்கம், விண்மீனின் அழிவு என பலவும் என் கண் முன்னால்... சிறு வயதில் கைகளால் இயக்கப்படும் புரஜெக்டரில் தான் இப்படியான ஒளிசார்ந்த அதிசயங்களை பார்த்திருக்கிறேன். இவர் அதனினும் அதிசயமாக வெறும் கைகளிலிருந்தே ஒளியை விரியச்செய்து  திரேதாயுகத்தின் பன்னிரெண்டு லட்சத்து சொச்சம் வருடங்களையும்,துவாபர யுகத்தின் நான்கு லட்சத்து வருடங்களையும் திரித்து நீட்டி ஏதோ வெள்ளி நிற நூலிழையாக திரட்டி காட்டினார்.  எனக்கு அதை தொட்டு பார்க்க வேண்டும் போலிருந்தது...அவர் மறுப்பேதும் சொல்லவில்லை,  இருந்தாலும் கூட  அவரது அமைதி தழுவும் புன்னகையை மீறி என்னால் எதையுமே செய்யமுடியவில்லை...அவர் எனக்கு சொல்ல நினைப்பதை எல்லாம் அவரது கண்கள் மூலமாகவே என் மனதில் பதிய செய்வதை போலிருந்தது.ஒருவித பரவச உணர்வு என்னை ஆட்கொண்டது போலொரு அயர்ச்சி...எல்லாவற்றையும் தாண்டி அவரிடம் கேட்க என்னிடம் நான்கு கேள்விகள் இருந்தன....ஆனால் அவரை போல கண்களால் செய்திகள் சொல்லும் வித்தை எனக்கு தெரிந்திருக்கவில்லை...வாய் திறந்து கேட்கவும் முடியவில்லை!! குறைந்தபட்சம் "மீண்டும் உங்களை எப்போது பார்க்கலாம்?" என்ற நான்காவது கேள்வியையாவது கேட்டு தொலைத்திருக்கலாம்....அன்றிரவு மட்டும் 38 முறை அதை நான் தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்ததாக அம்மா அடுத்தநாள் காலையில் சொல்லி சிரித்தாள். இதை ஏன் நான் ஒரே ஒரு முறை அவரிடம் செய்யவில்லை?? என்பது இப்போது எனது ஐந்தாவது கேள்வியாகிவிட்டிருந்தது.
அசாதாரணமாக விடிந்த அந்த காலை வேளையில் அம்மாவிடம் கூட இதை சொல்ல தோன்றவில்லை.விழுந்து விழுந்து சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த அவளை பார்க்க எனக்கு பாவமாகவும், சிரிப்பாகவும் இருந்தது.  




நாட்கள் நகர்ந்தாலும்..தினம் தினம் அந்த நிகழ்வு எனக்கு முந்தைய நாள் மாலை தான் நடந்தாற்போல ஒரு உணர்ச்சி.. என் வழக்கமான அலுவல்களை தாண்டி அவரை மீண்டும் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எனக்கு தொக்கி தவிக்க செய்தது.  
அவரை நான் மிகத் தீவிரமாக தேடத்தொடங்கிய இந்த நான்கு மாதங்களில்  விசித்திரமான சில சம்பவங்கள் நடந்தேறின,

சம்பவம்:1
  அவரை நான் முதன்முதலில் சந்தித்த சாலை சந்திப்பில் தார் சாலை அகற்றப்பட்டு, ஒரு கடவுளின் பிரகாரத்தோடு, ஒரு சிறு கோவிலும்,அதை சுற்றி பூத்து குலுங்கும் செடி கொடிகளும் உருவாக்கப்பட்டன.எப்போதுமே ஓய்வில்லாமல் இயங்கும் அந்த சாலை சந்திப்பை திடீரென வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமென்ன?  என என் நண்பனிடம் கேட்டு வைத்தேன்,பதிலில்லை.
சம்பவம்:2
  அவர் காட்டிய வெள்ளி இழையை பார்த்ததிலிருந்து இரவு நேர வானங்கள் ஒருவித அகோர சப்தங்களை என்னுள் மட்டும் பிரத்யேகமாக எழுப்புவதை போலவும், ஏதேதோ சாஸ்திரங்கள் என் காதில் ஓதப்படுவது போலவுமிருந்தது. இவற்றை மொட்டைமாடியில் படுத்துறங்குவதை நான் நிறுத்தியிருந்தாலே தவிர்த்திருக்கலாம் என்றாலும்..மேற்புறம் மூடப்பட்ட அறைகளில் உறங்க முனையும் வேளைகளில் என் சாவு நேர சம்பவங்கள் ஒன்று கூடி என் காதுக்குள் சம்பாஷிப்பது  போன்ற உணர்வுகள் தோன்ற ஆரம்பித்தன. மொட்டை மாடி உறக்கங்களை என்னால் அவ்வளவு எளிதில் உதறிவிட முடியவில்லை.
சம்பவம்:3
  என்னை சுற்றி வெண்மையான இறக்கைகள் கொண்ட விநோத மனிதர்களும், உடலெல்லாம் கருமை பூண்ட கொடூர மனிதர்களும் நடமாட ஆரம்பித்தார்கள். அவர்கள் என் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறார்கள் என உணரும் பொழுதுகளில் ஒருவித பயம் என்னை கவ்வ துவங்கியிருந்தது. வெள்ளை மனிதர்களும், கருமை மனிதர்களும் தாவி, பறந்து போர் புரிந்து கொண்டார்கள்.
சம்பவம்:4
  நான் கடவுளை சந்தித்த அதே தேதியிட்ட தபால் ஒன்றை தபால்காரர் என் வீட்டில் கொடுத்துவிட்டு போயிருந்தார்.ஒரு குறிப்பிட்ட முகவரியிட்ட அந்த தபாலில்   நான் அவரிடம் கேட்கவிருந்த கேள்விகளை அவர் அறிந்திருந்ததாகவும், கலியுகத்தில் கடவுளர்களுக்கு பேசும் திறன் இல்லையெனவும், சித்திரை பௌர்ணமியொன்றில் மக்கள் குறைகளை அவர் தீர்க்கவிருப்பதாகவும், அதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்யவும், நுழைவுக்கட்டணத்தை வசூலிக்கவும் என்னை தேர்ந்தெடுத்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.கலியுகத்தில் கடவுளர்களால் பேச முடியாதென்றால் என்னால் ஏன் 'அந்த' நாளில் பேச முடியாமலிருந்ததென்ற என் ஆறாவது கேள்விக்கும் கூட அந்த கடிதத்தில் பதிலில்லை.
                       


ன் பிறவிப்பயனை அடைந்துவிட்டதை போல ஒரு உணர்வு ஆட்கொள்ள....என் வயிற்று பிழைப்பு எனக்கு துச்சமாக பட்டது..அப்போது எனக்கிருந்த ஒரே கவலை மக்களை நம்பச் செய்து ஒன்று திரட்டுவது.சந்தேகத்துடன் தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். மக்களை நம்ப வைப்பது நான் எதிர்பார்த்த அளவுக்கு சிரமமாக இருக்கவில்லை.....நானே எளிதில் நம்பிவிடாத தன்மை கொண்ட என் பேச்சை முதல்முறை கேட்கும்போதே அதிசயம்போல் நம்பினார்கள்.. நுழைவுகட்டணத்தை செலுத்தி அவரவர் பெயர்களை பதிந்து கொள்ளவும் செய்தார்கள்,ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் மக்களே பிரச்சாரத்திலிறங்கிய அதிசயமும் நடந்தது.  மூன்றே வாரங்களில் என்னிடம் சேர்ந்த சில லட்சம் கோடிகளை என்னால் பாதுகாக்க முடியவில்லை ...மேலும், இவ்வளவு நபர்களை எப்படி கடவுளால் ஒரே நாளில் சந்தித்துவிட முடியும் என்ற சந்தேகமும் என்னை குடைந்தெடுத்தது,கடவுளிடமே கேட்டுவிட்டால் உசிதமென முடிவெடுத்து பணத்தை எடுத்துக்கொண்டு, கடவுள் குறிப்பிட்ட அந்த பௌர்ணமிக்கு முந்தின நாள் அவரை சந்திக்க அவரது தபாலில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேரில் போனேன்...ஒரு பெரிய மைதானத்தில் ஒரே  ஒரு சாதாரண ஆறுக்கு-நாலு அறையில் சாந்தசொரூபியாக வீற்றிருந்தார் "கடவுள்", இம்முறையும்,எனக்கு கேள்விகேட்கும் வாய்ப்பை அவர்வழங்கவேயில்லை...கொஞ்ச நேரம் நின்றிருந்துவிட்டு.வாகனத்தில் கொண்டு போயிருந்த  பணத்தை அங்கேயே வைத்துவிட்டு அமைதியாக திரும்பி வந்துவிட்டேன். 




'டவுள்" குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது... அன்று விடியற்காலையிலிருந்தே மக்கள் என்னை மொய்க்கத் தொடங்கினர். மக்கள் புடைசூழ, கடவுளின் இருப்பிடம் நோக்கி நடந்தே பயணித்தேன். லட்சக்கணக்கானவர்கள் பின்தொடர...பரந்து விரிந்த மைதானத்தில் மக்கள் நிறைந்திருக்க.. மக்களை அறைக்கு வெளியே நிறுத்திவிட்டு, கதவை திறந்து உள்ளே சென்று தாழிட்டேன்...அறை வெறிச்சோடி கிடந்தது ,கடவுள் அங்கு இல்லை!!! "30 நாளில் மோசடியை கற்றுக்கொள்வது  எப்படி" என்ற புத்தகம் மட்டும் கீழே சிதறிகிடந்தது.அறையை சுற்றி வெளியே காத்திருக்கும் மக்களை பற்றிய பயத்தையெல்லாம் தாண்டி, புதிதாக ஏழாவது கேள்வி ஒன்று என் மனதை குடைந்தெடுக்க ஆரம்பித்தது,

"நான் ஏன் கடவுளாக பிறக்கவில்லை??" 

ஒலிம்பிக் தங்கமும், திருடனின் மனைவிக்கு வந்த பங்கமும்


கால்தெறிக்க ஓடிக்கொண்டிருந்தான் முதலாமானவன்....நெருக்கடியான அந்த தெருவின் ஆறடி சாலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கினவன் கூட அப்படி ஓட முடியாது, ஆங் பின்னங்கால் பிடறியிலடிக்க....அப்படின்னு கூட ஏதோ சொல்லுவாங்களே..ஆனால் இவன் பண்ணிய வேலைக்கும், ஓடும் வேகத்துக்கும் முன்னங்காலே பிடறியில் அடிக்காத குறை.... கிட்டதட்ட சேரி எஃபெக்டில் இருக்கும் "செம்பட்டின்" அந்த தெருவில் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தான் . தெருவின் இருபுறமும் இருக்கும் வீடுகளின் வாசல்கள் கிட்டதட்ட ஒட்டினாற் போல் இருக்கும் சந்து பொந்துக்களில்...ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தட்டுமுட்டு சாமாங்களை கண்டபடி மிதித்தபடி உயிரை கையில் இறுக்க பிடித்துக்கொண்டு....மன்னிக்கவும்....கையில் ஒரு பர்ஸை இறுக்க பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தான்.'ஓட்ட' ஜோசியம் தெரிந்திருந்த ஒரே காரணத்தினால் இவனை என்னால் இனம் காண முடிந்தது.இவன் திருடன்.



ல்லைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தாள் இரண்டாமானவள், செம்பட்டையடுத்த குண்டூரிலிருந்து ஓட்டமும் நடையுமாக தன் கேரக்டரை நிறைவாக தொடங்கியிருந்தாள் இவள். 

"பாவிப்பய மகன், வேசி மகன்..ராத்திரி அவ்ளோ சொல்லியும் கேக்காம மறுபடியும் திருடபோயிருக்கானே ...உருப்புடுவானா இவன் ...அய்யயொயொயோ".....

என ஆம்புலன்ஸ் சைரன் போல இவள் கதறிக்கொண்டு வந்தது...பிறவி செவிடர்களுக்கு கூட கேட்காமல் இருந்திருக்காது. இந்த நாய் நிச்சயம் செம்பட்டுக்கு தான் களவாடப்போயிருக்கும்....நேத்து தான ஏட்டையா எச்சரிச்சு வுட்டான்....இனிமே திருடினா இவன உரிச்சு எடுத்திருவேன்னு வேற சொன்னானே அந்த தொப்பை ஏட்டு.....நான் கூட இனி இவன் திருட மாட்டான்னு புள்ள மேல சத்தியம் பண்ணி காப்பாத்தி விட்டனே....புள்ளை கூட நேத்திக்கு வந்து அழுதுச்சே...பள்ளிகூடத்துல உங்கப்பாரு என்ன தொழில் பண்றாருனு கேட்டா பதில் சொல்ல முடியலன்னு......இப்படியெல்லாமும் இவள் நினைத்துக்கொண்டு ஓட்டமும், நடையும், பதற்றமுமாக நடந்து கொண்டிருந்ததை வைத்து இவளை இனம் காண டெலிபதியை டீ, காஃபி போல குடிக்கும் என்னால் முடிந்தது...இவள் திருடனின் மனைவி...




வியர்வையும், ஓட்டை புல்லட்டின் இஞ்சினிலிருந்து டீசலும் தெறிக்க புல்லட்டை ஓட்டிக்கொண்டிருந்தான் மூன்றாமானவன்....இவன் கொஞ்சம் கார்ப்பரேட் வாசி போல தென்பட்டான்...கோஸ்ட் ரைடர்ஸில் வரும் ஜானி பிளேஸை தோற்கடிப்பது தான் இவன் லட்சியம் என்பது இவன் சொல்லாமலேயே இவன் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தது....இவனை கொஸ்ட் ரைடர்ஸோடு ஒப்பிட்டது இவனது வேகம் குறித்தது.ஆனால் இவன் மூகத்தை பார்க்க எதையோ பல்க்காக பறிகொடுத்தவன் போலிருந்தான்.  திருச்சி டோல்கேட்டில் இயங்கத் தொடங்கிய இவனது மெஷின் குதிரை செம்பட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

"கொய்யால....அவன் மட்டும் கையில சிக்கினான் செதைச்சிடுவேன்..._______முண்டம்"....

என அவன் கத்தியது. அவனது மெஷின் குதிரையின் இரைச்சலைத் தாண்டி யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. வழியில் ஒரு பெரியவரை வழிமறித்து 

"இந்த வழியா ஒருத்தன் சிகப்பு கலர் சட்டை போட்டுகிட்டு போனானா பெரியவரே??

"______________ங்ங்கே.."வென பெரியவர் விழிக்க...

"டோல்கேட்டில நான் பஸ்ல இருந்து இறங்குறப்போ என் பர்சை அடிச்சிக்கிட்டு ஓடி வந்துட்டான் அதனால் தான் கேக்குறேன் பெரிசு...சீக்கிரம் சொல்லு எனக்கு நேரம் ஆகுது"அவசரப்படுத்தினான்.

"_______________________"

"அந்த ஆளு செவிடுப்பா..அவன் தாலிய ஏன் அறுக்குற?? " இன்னொரு பெரிசு எகத்தாளமாக ஏசிவிட்டு கடந்து போனது. 

சப்பென ஆகிவிட்டது இவனுக்கு...மீண்டும் புல்லட்டை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு...தன் கெட்ட
வார்த்தை அர்ச்சனைகளை தோடர்ந்தபடி...ஓட்டதொடங்கினான்.
'புல்லட் ஜோசியம்' தெரிந்திருந்தும் கூட என்னால் இவனுடைய பர்ஸ் காணாமல் போனதால் தான் இவன் மூஞ்சியை இப்படி வைத்திருக்கிறானென்ற பேருண்மையை சிரமப்பட்டு கண்டுபிடிக்க வேண்டியதாய் போய்விட்டது .இவன் பர்ஸை கோட்டை விட்டவன். கோட்டைசாமி என இனி விளிக்கப்படுவான்.



கால்தடுக்கி தொபுக்கடீரென கீழே விழுந்தான் திருடன்...

"சனியன் கண்ண எங்க பொடறியலயா வெச்சினு கீற?" 

குப்பத்து ஆண்டியின் அர்ச்சனையையும், மீசையில் ஒட்டியிருந்த மண்ணையும் அசால்ட்டாக  துடைத்து தள்ளியபடி மீண்டும் எழுந்து ஓட எத்தனித்தான் திருடன். முடியவில்லை..முட்டி பெயர்ந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது....பலத்த அடி...அடுத்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை....சோகமாகவும், கோபமாகவும் தன்னை தடுக்கிவிட்ட கல்லை திரும்பி பார்த்தான் . கருப்பும் வெள்ளையும் கலந்த கல்...கொஞ்சம் கிட்டே நெருங்கினான்... மைல் கல்!!!
அழுக்கு படிந்திருந்த கல்லை நன்றாக துடைத்துவிட்டு பார்த்தால் இடப்பக்கம் அம்புகுறி போட்டு..மெயின்ரோடு 300 மீட்டர் என்றிருந்தது...திருடனுக்கு "கொள்ளை" மகிழ்ச்சி! 
"உசுரு இல்லாட்டியும் என்னைய காப்பாத்தினயே கல்லே...தாங்க்ஸுப்பா..மெயின்ரோட்டுக்கு போனா எப்பிடியும் தப்பிச்சிரலாம் ...இன்னும் கொஞ்ச நேரம் நான இங்கனையே சுத்திகினு இருந்திருந்தா என்ன சுளுவா பிடிச்சிருப்பானுங்க" என சொன்னதோடு கல் காட்டிய திசையில்  நொண்டி நொண்டி நடையை கட்டினான்.




ந்த திருட்டு கம்னாட்டி எங்க அடி வாங்கிட்டு இருக்கானோ!! கடவுளே என் தாலிய காப்பாத்து என புலம்பிக்கொண்டே வேகத்தை கூட்டி நடந்து வந்துக்கொண்டிருந்தாள் திருடனின் மனைவி...அந்த விமலா சனியன் வேற எம்புருஷன் உத்தமன்,குடிக்கிறதில்ல, சீட்டாடுறதில்ல ஒழுங்கா கூலி வேலைக்கு போறான் அப்படி இப்பிடின்னு பீத்திகிட்டு மினுக்கிட்டு திரியறா...நாங்கூட எம்புருஷன் திருந்திபிட்டான்...இப்பவெல்லாம் திருடறதில்ல...பால்பண்ணைக்கு வேலைக்கு போறான்னெல்லாம் அடிச்சு விட்டுட்டனே...இப்ப இந்த சனியன் திருப்பியும் மாட்டிகிட்டு ஜெயிலுக்கு போய்ட்டு வந்திருச்சின்னா தெருவுல மானம் போய்டும், விமலா காறி துப்புவா...வேற வூடு பாக்கறத விட்டா வேற வழி இல்ல...இந்த கடங்காரன கட்டிகிட்டு ஒரு ஊருல நிரந்தரமா இருக்க முடியல..எங்க போனாலும் சனம் காறி துப்புது..இன்னிக்கு மட்டும் கையில கெடைக்கட்டும்..தாலிய அறுத்து மூஞ்சியில எறிஞ்சுபிடுறேன்...எம்புள்ளைய கூலி வேலைக்கு போயி காப்பாத்த எனக்கு தெரியும்! என "கடவுளே தாலிய காப்பாத்து"வில் தொடங்கி "தாலிய அறுத்து எறியனும்" வரைக்கும் திருடனின் மனைவியின் புலம்பல்கள் பல தளங்களில் பயணித்தன.



முழுக்க முழுக்க கோபம் கொப்பளிக்க மெஷின் குதிரையின் கர்ணகொடூர சத்தமும் சேர்ந்து கொள்ள திருடனை கொண்டு போக புல்லட்டில் வரும் எமன் கணக்காக மூஞ்சியை வைத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தான் கோட்டை சாமி'...அதை கோபம் என்று கூட சொல்ல முடியாது...வெறி!...திருடன் கையில் கிடைத்தால் கொத்து பரோட்டா போட்டுவிடுமளவுக்கு வெறி.இருக்காதா பின்னே ?! காலையில் அம்மாவுக்கு ஆபரேசன் செலவுக்காக பணம் எடுத்துகிட்டு பேங்குல இருந்து டவுன் பஸ்ஸுல ஆஸ்பத்திரிக்கு திரும்ப போற வழியில தான் ஒரு திருட்டு நாய் பர்சை அடிச்சிகிட்டு ஓடிட்டுது! சுளையா 30 ஆயிரம் ரூவா சலவை நோட்டுகள்...இன்னிக்கு அந்த பணம் கெடைக்கலேன்னா..அம்மாவோட கதி என்ன?? என அவன் கொஞ்சம் வாய்விட்டே புலம்பியது..அவனையும், அவன் புல்லட்டையும் தாண்டி எனக்கு மட்டும் கேட்டது. 



திருடன் மெயின்ரோட்டை தாண்டி ஒரு முச்சந்தியில் ஏதாவது வண்டி வருமா என எதிர்பார்த்து காத்திருந்தான். திருடனின் முதுகு பக்கமிருந்த சாலையில் வேக வேகமாக வந்துக்கொண்டிருந்த திருடனின் மனைவி இவனைக்கண்டதும் வேகமெடுத்தாள்.


புல்லட்டில் வந்துகொண்டிருந்த கோட்டைவிட்டவனின் புல்லட் அந்த முச்சந்திக்கு வந்ததும் மக்கர் பண்ணியது. பைக்கை விட்டிறங்கி என்னவோ நோண்டிக்கொண்டிருந்தான்.டீசல் தீர்ந்துவிட்டிருப்பதை கண்டுபிடித்து.."ஷிட்" என புல்லட்டை உதைத்தான்..யாராவது உதவிக்கு இருக்கிறார்களா என சுற்றி பார்த்தால் அவனுக்கு எதிர் சாலையில் முதுகை காட்டியபடி திருடன்.கிட்டதட்ட அவனை நோக்கி ஓடினான்.


திருடனிடம் வந்த திருடனின் மனைவி அவனிடம் ...

"ஏய்யா இந்த பக்கம் போனா செம்பட்டு வரூமா? என கேட்டாள்..

ஆமோதிப்பது போல திருடன் தலையாட்ட அந்த திசை நோக்கி தனது புலம்பல் நடையை தொடங்கினாள் திருடனின் மனைவி.



திருடனை நெருங்கிய கோட்டைசாமி..

"சார் இங்க பக்கத்துல எங்க பெட்ரோல் பங்க் இருக்கு?? " என்றான். திருடன் கை காட்டிய திசையில்...தன் புல்லட்டை உருட்டதொடங்கினான் கோட்டைசாமி. 


ன்னமும் வண்டி கிடைக்காமல் தார்சாலையை வெறித்துபார்த்தபடி நின்றிருந்தான் திருடன்.




ஆங் ஒரு சின்ன விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே.... திருடன் என்ற ஒரு விஷயத்தை தவிர நம்ம 'ஹீரோ' திருடனுக்கும் "திருடனின் மனைவி"யின் கணவனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை! அதே சமயம் சிகப்பு சட்டை போட்டிருந்ததை தவிர கோட்டைசாமியின் பர்ஸை அடித்தவனுக்கும் நம்ம ஹீரோவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!!

வெப்பம் விழுங்கும் நியூட்டன்



     காற்றின் பரப்புஇழுவிசையை விர்ரென கிழித்துக்கொண்டு ஜன்னலைத்தாண்டிப்போய் விழுந்தது என்னுடைய ப்ளூ ரே டிஸ்க்....

  நான் அதிர்ந்து அடங்குவதற்குள், புரொஃபசெர் டோரா அடுத்த அஸ்திரத்தை என் மீது பாய்ச்சினார்,


    "வெளியே போடா.. வந்துட்டான் தூக்கிகிட்டு பெரிய இவனாட்டம், இதெல்லாம் ஒரு இன்னோவேஷனாம். உன்கிட்டயெல்லாம் பொறுப்ப குடுத்தா இப்டிதான் ஆகும்!" 


 திகீரென்றிருந்தது.கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்க முன்னே நிகழ்ந்த காட்சிகள் மங்கி, துக்கம் கண்ணை அடைத்தது. இப்படியொரு விஷயத்தை நான் எதிர்பார்த்து வந்திருக்கவில்லை! எதற்கெடுத்தாலும் என்னை முட்டாள், மக்கு, லாயக்கில்லாதவன் என காரணமில்லாமல் திட்டி தீர்க்கும் டோராவின் வாயை இம்முறை நிச்சயம் அடைத்துவிட வேண்டுமென இரவுபகலாக உழைத்து உருவாக்கிய என்னுடைய ஃபார்முலா கொண்ட டிஸ்க் தான் 
 இங்கே ஜன்னல் தாண்டி வாட்டர் ஃபவுன்டெயினில் மூழ்கிகிடக்கிறது. சற்றுநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். தண்ணீரில் பிரதிபலிக்கும் 'தோற்றுப்போன' என்னை ஐந்து நிமிடங்களுக்கும் அதிகமாக வெறிக்க என்னால் முடியவில்லை. மெதுவா ஊர்ந்து நடக்கத்துவங்கினேன்.


      ஹாட்சூட்டை உடுத்த மறந்துவிட்டு ஒருநாள் அதிகாலை ஜாக்கிங் போகும்போது தான் இந்த ஐடியா   ஏதேச்சையாக மனதில் உதித்தது. வெயில், வெயில், வெயில்... சூரியனின் சிதைவு காலம் எனப்படும் பிரபஞ்ச   விழுங்கலுக்கான அறிகுறிகள் இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே தெரிய ஆரம்பித்திருக்கின்றன. காலை ஏழு   மணிக்கெல்லாம் வெப்பநிலை குறைந்தபட்சம் 68 டிகிரியை தொட்டுவிடுகின்றது. மத்தியான வேளைகளில் உலகமே கிட்டதட்ட முடங்கிவிடும். மனித நடமாட்டம் பெரும்பாலும் வீதிகளில் இருக்காது. அத்தியாவசிய தேவைகளுக்காக   நகரங்களில் மக்கள் சுற்றித்திரிய சப்வேக்கள் உலகமெங்கும் உண்டு என்றாலும் மத்தியான வேளைகளில் 
 வெளிச்செல்வதை மக்கள் விரும்புவதில்லை. காலை 1 மணிக்கு ஆரம்பித்து 10 மணிக்குள்ளாக தான் பெரும்பாலான அலுவலகங்களின் வேலைநேரங்கள் இருக்கும். 10 மணிமுதலான பகல் வேளைதான் இப்போதெல்லாம் மனித இனம் தூங்குதலுக்கும், இன்னபிற காரியங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.       
     

  இந்த மாதிரியான சூழ்நிலையில் ஹாட்சூட் உடுத்தாமல் வெளியே போகக்கூடாதென்பது தான் அரசாங்கத்தின் ஆணை. யாருமே ஹாட்சூட் இல்லாமல் வெளியே போகக்கூடாது அப்படிப்போனால் கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டுமென்பது அரசாங்கத்தாலேயே கொண்டுவரப்பட்ட விதி! அரசியல்வாதிகள் கூட வெயில் சார்ந்த   வாக்குறுதிகளை கொடுத்துத்தான் தேர்தல்களை சந்திக்கிறார்கள். மரம் செடிகளை மீண்டும் நட்டு உலகமெங்கும் வளர்ப்போம் என்கிறார்கள். பெரும்பாலும் அழிந்துபோய்விட்ட தாவர இனங்கள் மீண்டும் பயிரிடப்பட்டு அவை 
வளர்தலுக்கான சூழ்நிலை உருவாக்கப்படுமென்கிறார்கள். வெயிலின் தாக்கத்தை குறைக்க ஹாட்சூட், குளிர்சாதங்களை   தாண்டி ஒரு மாற்று நிச்சயம் உருவாக்கப்படுமென்கிறார்கள். 21ம் நூற்றாண்டுக்கு முந்தைய சூழ்நிலைகள் பூமியில்   மீள்கொணரப்படும் என்கிறார்கள் , ஆனால் காலங்காலமாக நடப்பது போல எந்த மாநிலகட்சியோ,தேசிய கட்சியோ கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியதே இல்லை. அதிலும் கொடுமையான விஷயம், ஹாட்சூட்டுகளையும், குளிர்சாதங்களையும் அரசாங்கம் மட்டுமே விற்கும்!  மாதத்திற்கு ஒரு முறை ஹாட்சூட்டையும், மூன்று மாதத்திற்கொரு முறை வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் குளிர்சாதனங்களையும் ஒவ்வொரு குடும்பமும் மாற்றியே தீர வேண்டும். மாற்றாத பட்சத்தில் அவை வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டு கிட்டதட்ட அனைவரிடமும் பணம் பறிக்கப்படும். 


   அரசாங்கம் குளிர்சாதனங்களை பல தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது. நான் பணியாற்றுவது   அப்படியான ஒரு தனியார் நிறுவனத்தில் தான். பொதுவாக இப்படியான எல்லா தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி பிரிவொன்று இயங்கி வரும். அதாவது 
வெயிலை சமாளிக்கும் மாற்றை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்கிறோம் என பொதுமக்களை ஏமாற்ற அரசாங்கம்   நிறுவனங்களுக்கு போட்டிருக்கும் கட்டளை அது. கிட்டதட்ட அங்கு எந்தவித ஆராய்ச்சியும் நடக்காதென்பதும், பெரும்பாலான நிறுவங்கள் அந்த மையங்களை உணவருந்தும் கூடமாக பயன்படுத்திவருகின்றன என்பதும்   முகத்திலறையும் உண்மை!.அந்த ஆராய்ச்சி வென்றுவிட்டால் தான் அரசாங்கத்தின் முக்கியத்தொழிலே   படுத்துவிடுமே! 


  வேலைக்கு நான் புதிது என்பதால் நிறுவனத்தின் வழக்கங்களை நான் அறிந்திருக்கவில்லை. அதாவது புதிதாக   இணையும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வெயில் மாற்று ஆராய்ச்சியை தொடருமாறு அழைப்பு விடுக்கப்படும், ஆனால்  மாணவர்கள் அதை தட்டிகழித்துக்கொண்டே வந்து ஆராய்ச்சியை சமர்பிக்கும் நாளில் தன்னுடைய ஆராய்ச்சி   தோல்வியுற்ற மாதிரியாக காண்பிக்க வேண்டும்.   இந்த ரகசிய சூட்சுமங்களை அவர்கள் சொல்லிகொடுக்கும் முக்கியமான வகுப்பொன்றை நான் தவற விட்டிருந்தேன். அதனால் தானா என்னவோ ரொம்பவும் மெனக்கெட்டு என்னுடைய ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்திருந்தேன்.

அம்மோனியாவோடு சேர்த்து பெயர் சொல்லக்கூடாத வேதிப்பொருட்கள் திணிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட   இன்ஃப்ராரெட் ஷூட்டர் நிச்சயம் புரட்சியை ஏற்படுத்துமென்பது எனக்கு சத்தியமாகத்தெரியும்.    வானை நோக்கி இந்த ஷூட்டரால் சுட்டால் போதும் உள்ளேயிருந்து பரவும் அம்மோனியா கலந்த கலவை   இன்ஃப்ராரெட் அலைகளோடு விரவி ஒளி ஆற்றலில் இருக்கும் வெப்பத்தன்மையை விழுங்கிவிடும்! கிட்டதட்ட இது   ஆற்றலை அழிப்பதற்கு சமமானது! ஒளி அலையின் ஒரு குவாண்டம் பொட்டலத்தை இது சிதறடிப்பதன் மூலம்   அடுத்தடுத்த குவாண்டங்களின் ஆற்றல் செத்து போவது தன்னிச்சையாக நிகழுமென்பது தான் இதன் தனிச்சிறப்பு.

ஒரு   ஷூட்டின் வீச்சு 5000 கிலோமீட்டர் சுற்றளவுக்கு விரவும் சக்தி வாய்ந்தது. இதனால் கிட்டதட்ட 18 டிகிரி வரை   வெப்பநிலையை கட்டுப்படுத்தலாம்! இது ஒரு சரித்திர சாதனையாக இருக்கப்போகிறது .

 காலங்காலமாக ஐன்ஸ்டீனையும், நியூட்டனையும் கொண்டாடினார்கள், ஆற்றலுக்கு அழிவில்லை என்றார்கள்.   ஆனால் என்னால் முடிகிறது வெப்ப ஆற்றலை என்னுடைய சாதாரண ஷூட்டரைக்கொண்டு விழுங்கி ஏப்பம் விட முடிகிறது.  இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு என் பெயரைத்தான் அறிவியலுலகம் மந்திரமாகக் கொள்ளப்போகிறது   என்றெல்லாம் கனவுகண்டிருந்த போது தான் என்னுடைய ஆராய்ச்சியடங்கிய டிஸ்க் வெளியே எறியப்பட்டது. 


     மெதுவாக ஊர்ந்து எதையெதையோ சிந்தித்தபடியே சென்று என் வீட்டை அடைந்த நான் என்னுடைய லேப்பில்   சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன். என்னுடைய ஷூட்டரை பார்க்க எனக்கே ஆதங்கமாக இருந்தது. என்னவொரு   கேவலமான அரசாங்கம். மக்களின் பிரச்சினை தீர்க்கும் ஒரு சாதனத்தை கூடவா அனுமதிக்கமாட்டான்கள்!? 
இவன்களுக்கு நல்ல சாவே வரப்போவதில்லை என்பதாக நினைத்துக்கொண்டு என்னுடைய ஷூட்டரை வருடியபடி   நின்றிருந்தேன். திடீரென காற்றில் ஒலியின் அடர்த்தி கூடி சத்தம் அதிகமானது . கண்ணாடி ஜன்னல் வழியாக வெளிப்புறமாக பார்த்தேன். மக்கள் அனைவரும் கதறிக்கொண்டு வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தார்கள். எனக்கும்   பதற்றமேற, தெர்மோ சென்ஸாரை ஜன்னலுக்கு வெளியே நீட்டி வெயிலில் படும்படி வைத்தேன். வெப்பநிலை 136   டிகிரி! பகீரென்றது! சூரியப்புயல்! அதிலும் இது கொடூரமாக அல்லவா இருக்கின்றது. 136 டிகிரிகளை தாளாது மக்கள் 
சுருண்டு விழுவதை வீட்டுக்குள்ளிருந்து பார்க்கவே பதற்றமாக இருந்தது. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். 


இந்த புயலுக்கு எவனும் தப்ப முடியாதென்பது நிச்சயம் தெரிகிறது. நாளைக்குள்ளாக நிச்சயம் மனித இனத்தில் பாதி   இருக்கப்போவதில்லை!     வேகமாக ஓடி என்னுடைய ஷூட்டருக்கு மின் இணைப்பு கொடுத்து அதன் அதிகபட்ச ஃப்ரீகுவன்சியில் வைத்து.  ஷூட் பட்டனை தட்டினேன். ஷூட்டரிலிருந்து மெதுவாக விரவத்துவங்கிய அகச்சிவப்பு கதிர் மெதுவாக ஜன்னல் 
வழியாக விரவி வெப்பத்தை கொல்ல ஆரம்பிக்க, பக்கத்திலிருந்த சேரில் அமர்ந்து மீண்டும் துளிர்க்க ஆரம்பித்த என்   நியூட்டனாகும் கனவை தொடர ஆரம்பித்தேன்.     

நிதர்சனங்களின் நிர்ச்சலனம்



                                  ன்னுடைய வாதங்கள் எதுவுமே எனக்கு கைகொடுக்கவில்லை.


   "நான் சொல்லுவதை ஏன் யாருமே நம்ப மறுக்கிறீர்கள்?" ஆற்றாமையில் மௌனம் கலைத்தேன்.


  "நம்பிக்கை என்பதை விட ஆதாரம் எனும் விஷயத்தை தான் சட்டம் சார்ந்திருக்கிறது! என்றார் கப்பல் கேப்டன்.

  "குற்றம் சுமத்தப்பட்ட நானே நான் செய்யவில்லை என்கிறேனே! என் மனசாட்சியை விடவா இன்னொரு பொருள் என் மனதிலிருக்கும் உண்மைக்கு சாதகமாக சாட்சி சொல்லிவிட போகிறது?


  "உன் மனதில் இருப்பவை உண்மையா பொய்யா என்பதை தீர்மானிக்கவேண்டியவை ஆதாரங்கள், உன்னால் முடிந்தால் அவற்றை ஏற்பாடு செய்..இல்லாதபட்சத்தில் வாயை மூடுவது உசிதம். எனக்கு சத்தம் பிடிக்காது! .


 ஆதாரம்..ஆதாரம்..ஆதாரம்!! எங்கே போவேன் அந்த கருமத்தை கண்டுபிடிக்க? நான் இந்த ஆராய்ச்சிக்கப்பலில் இடம் பிடித்ததே மிகவும் துரதிஷ்டவசமான ஒரு விஷயம். எனக்கு என் உயிரை பணயம் வைத்து ..எங்கோ ஒரு கடல் நடு தீவில் உயிர்கள் இருக்கலாமேன நம்பப்படுகிற தீவை கண்டுபிடிக்க மூன்றரை வருடங்கள் பயணப்படுவதில் ஈடுபாடில்லை. 

"எவன் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன? நாம் எதற்காக இவ்வளவு சிரமங்களை வலிய போய் வேட்டிக்குள்   விட்டுக்கொள்ள வேண்டுமென்றேன். 

  காஸ்காடகாமா என்னை வெறித்து பார்த்தார். அப்புறம் பக்கத்திலிருந்த பணியாளை. 
 என்னை வெறித்ததன் அர்த்தம் வெறுப்பே தான்! ஆனால் பணியாளுக்கு வேறு அர்த்தத்தில் வெறிப்பு  பகிரப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் வெளிச்சமற்ற அறையில் ஆகாரமின்றி அடைக்கப்பட்டேன். ஆகாரம் வேண்டுமெனில் நான் கப்பலில் இடம் பெற சம்மதிக்கவேண்டுமென்பது தான் எனக்கு இடப்பட்ட நிபந்தனை! எனக்காக இல்லாவிட்டாலும் என் வயிற்றுக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியதாயிற்று.

 என்னை விட திறமையான கடலோடிகள் எங்களுடைய குழுவில் இருந்த போதிலும்.காஸ்காடகாமா என்னை வலுக்கட்டாயமாக ஏன் அழைத்துப்போகிறார் என்பதற்கான காரணம் ஒரு இரகசிய சுற்றறிக்கை மூலமாக அனைவருக்குள்ளும் அலசப்பட்டது. என்னிடம் மட்டும் அது மறைக்கப்பட்டது. எத்தனை முயன்றும் அதனை என்னால் அறிந்துக்கொள்ள முடியவில்லை. 

 15 கப்பல்களும் எண்ணூறு மனிதர்களுமாக ஒரு நெடும்பயணம் 799 நபர்களின் ஆரவாரத்தோடும், என் ஒரே ஒருவனின் வெறுப்போடும் துவங்கியது. ஒரே நாளில் உயிரைக்குடிக்காமல் நான்காண்டு காலம் சிறிதுசிறிதாக கவ்வப்போகும் அபாய விஷத்தை யாரும் உணர்ந்தபாடில்லை. ஓபிய வில்லைகளை கரைத்தடித்து ஆட்டமும் பாட்டமுமாக முதல் வாரத்தை கழித்தார்கள் சக நண்பர்கள்.


 நான் எதிலுமே கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே நிற்பதும்,எல்லோரிடமும் வெறுப்பு உமிழ்வதும், ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் பதிவு செய்யப்பட்டது. நான் இரவுகளில் தூங்காமல் கப்பல் மேல்தளத்தில் அமர்ந்துக்கொண்டு ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாகவும் எழுதிக்கொண்டான் ஓபிய போதையிலிருந்த ஒழுங்கு குழுவின் தலைவன்.  


 ஒரு திசைகாட்டியை நம்பும் அளவுக்கு கூட இங்கு யாரும் என்னை நம்ப தயாராக இல்லை. இதுவரை மனித சுவடுகளே படாத கடல்வழிப்பயணம் என்பது. மற்ற மக்களைப்போலல்லாமல் தூக்கத்திலும் கூட என்னை பயமுறுத்தியது. 

மூன்றாவது வாரத்திலேயே நீளவாக்கில் உருகுலைந்த நிலையில் தட்டுபட்டது ஒரு தரைபரப்பு. எல்லோரும் ஆர்பரிக்க, ஏழடி உயரத்திலிருந்த மூன்று பேர் கொண்ட குழு தீவை பார்வையிட அனுப்பிவைக்கப்பட்டார்கள். ஆவலாக அவர்கள் போன பாதையையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க, ஆழ்ந்த அமைதி காத்த மரங்கள் ஒரு சிறு சலனம் காட்டி பின் அடங்கின. அதன் பின்னும் கூட அவர்கள் திரும்ப வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டு காத்திருக்க ஆரம்பித்தார்கள் ஊழியர்கள். எனக்கு முன்னமே இது தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இதில் நான் ஆர்வம் காட்டவில்லை. வழக்கம் போல இதுவும் ஒழுங்கு குழுவால் குறித்துக்கொள்ளப்பட்டது. தீவில் இறங்கிய மூவர் குழுவிடம் நான் ஏதோ பேசிக்கொண்டிருந்ததாகவும் கோபமாக எழுதிக்கொண்டான் குழுத்தலைவன். எதிர்த்து பேசினால் வரப்போகும் பட்டினி சிறைக்கு பயந்து அப்போதும் அமைதி காத்தேன். 


 இப்படியாக மூன்று வாரங்கள் கழிந்தன. தீவில் இறங்கியவர்கள் திரும்ப வந்தபாடில்லை. இவர்களும் அவர்களை மீட்க முயற்சிக்கவில்லை. அதற்கு பதில் அவர்களை தீவில் இறக்காமலேயே இருந்திருக்கலாம் என நான் சொல்லியிருந்தால் அதுவும் குற்றம் தான்.

 அதன்பின்னும் மூன்று நாட்கள் கழிந்த நிலையில் தான் அவர்கள் குறித்து நம்பிக்கையிழந்தார் காஸ்காடகாமா,

 "தீவில் இறங்கியவர்கள் திரும்பாத பட்சத்தில் நிச்சயம் ஏதோ இங்கு ஆபத்து இருக்கிறது, மேலும் மனித நடமாட்டமோ, உயிரின நடமாட்டமோ இங்கு இல்லாததை வைத்துப்பார்க்கும்போது இது அமானுஷ்ய சக்தியின் வேலையாக இருக்கலாம். நம் பயண காலத்தில் சிறிதளவே கடந்துள்ள நிலையில் அவர்களைத்தேடி கீழிறங்கி நம்மில் மேலும் பலர் இறப்பதை நான் விரும்பவில்லை. நாம் இங்கிருந்து கிளம்புவது தான் சரி" என்று எல்லோரையும் கூட்டி சொன்னார்.


 வழக்கம் போலவே ஆர்ப்பரித்தார்கள் மக்கள். அவர்களை அனுப்புவதில் ஆரம்பத்திலேயே ஆர்வம் காட்டாத என்னை,  சபித்தவர்கள். அவர்கள் இறந்ததை மட்டும் ஆரவாரமாக ஏற்றுக்கொள்கிறார்கள். நல்லவேளை நாம் கீழிறங்கி உயிரைவிடவில்லை என்பதற்காக சந்தோசப்படுகிறார்களோ? இருக்கலாம்.

                                    மாதங்கள் கழிந்தன. தினமும் தொடரும் ஒரே வகையான கொண்டாட்டங்களும்,ஓபியமும், கடல் உணவும் அனைவரையும் வெறுப்புறசெய்தது. பெரும்பாலானோர் சாப்பிடுவதை தவிர்த்தார்கள். நாங்கள் பயணப்பட்ட திசை நோக்கி வெறித்துபார்த்து ஏக்கம் கொள்ள துவங்கினார்கள். கடலின் நிசப்தமும், குரூர ஓங்காரமும் எல்லாவற்றிற்கும் பயந்து நடுங்கினார்கள் .
 கரை தென்படாதா என்பது தான் அனைவரின் ஒருமித்த விருப்பமாக இருந்தது. பகலில் தூங்குவதும், இரவில் விழித்திருப்பதும், வாய்விட்டு அழுவதுமாக ஊழியர்களின் செயல்பாடுகள் விசித்திரம் கொண்டன.

 காஸ்காடகாமா முதன்முறையாக பயணத்தை எண்ணி வருத்தமுற ஆரம்பித்தார். அனைவரையும் குணப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். மருத்துவக்குழுவாலேயே பிரச்சினை என்ன என்பதை கண்டறிய இயலவில்லை. சிகிச்சையை துவங்கிய மருத்துவக்குழுவும் சில வாரங்களில் நம்பிக்கையிழந்தது. ஒருவிதமான பயமும், பதற்றமும் தொற்றிக்கொள்ள,யாருமில்லாத வேளையாகப்பார்த்து மருத்துவகுழுவினர் விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார்கள்.        

   மருத்துவக்குழுவின் மரணம் எங்களது கப்பலை மட்டுமல்லாமல், மற்றைய பதினான்கு கப்பலில் இருந்தவர்களையும் பயம் கொள்ளச்செய்தது. பிறகப்பல்களில் இருந்த மருத்துவக்குழுவினர் அவர்கள் குணப்படுத்த முயற்சித்ததால் தான் இறந்தார்கள் எனக்கருதிக்கொண்டு மருத்துவம் செய்ய மறுத்தார்கள்.

 காஸ்காடகாமா இதே நோய் தொற்றும் நிலைக்கு ஆளான போது. கப்பலின் மேல் தளத்துக்கு சென்று ஒரு நாள் முழுவதும் வாய்விட்டு கத்தினார். அவர் வாய்விட்டுஅழுவதன் மூலம் மன அழுத்தத்தை விரட்டி அடிக்கலாமேன எண்ணியிருக்கக்கூடும்! கிட்டதட்ட எழுநூறுக்கும் மேற்ப்பட்ட ஊழியர்களும் இதே மாதிரி முயற்சிக்க, கடலின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு அந்த இரவு முழுவதும் கம்பீரமாக பயணித்தன கப்பல்கள். 


                               விடியற்காலையில் கடலின் போக்கு சற்று மாறியிருந்தது. அழகாக நுரைத்துக்கிளம்பி, கப்பல் விளிம்புகளை இதமாகத்தழுவிச்சென்றது கடல். தாங்கள் இரவு போட்ட சத்தத்தில் கடல் பயந்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள் ஊழியர்கள். 
 சற்று பதற்றம் குறைந்து கழிந்துக்கொண்டிருந்த இரண்டாவது வாரத்தின் ஓரிரவில் கடைசியாக வந்துக்கொண்டிருந்த ஏழு கப்பல்கள் திசைமாறிப்போயின. கப்பல் காணாமற் போனதற்கான காரணம் தீவிரமாக அலசப்பட்டது. போலி வரைபடங்கள் தயாரித்து நான் அவர்களை திசைதிருப்பியிருக்கலாமென என் கணக்கில் குற்றம் சேர்க்கப்பட்டது. என்னை அவர்கள் விசாரிக்காததால், கடலின் வெப்ப மற்றும் குளிர் நீரோட்டத்தின் காரணமாக கடல் காற்றின் திசை திடீரென மாற வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தை நான் சொல்ல முடியாமல் போயிற்று.


                                பயணம் துவங்கிய ,முதல் நாளில் எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் இப்போது வரைக்கும் இருக்கின்றேன். நம்பிக்கை நிறைந்தவர்களைத் தான் கடலின் ஓங்காரம் குலைத்து போட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது.சுத்தமாக நம்பிக்கையோ பற்றோ இல்லாத என்னை கடலால் எதுவுமே செய்யமுடியவில்லை. கடலின் ஓங்கார சீற்றத்துக்கு என் மௌனத்தையே பதிலாகத் தந்துகொண்டிருந்தேன். 

அடுத்த கட்டமாக பசிப்பிணி எல்லோரையும் வாட்டி வதைக்கத்துவங்கியது. கடல் உணவுகளை சாப்பிட்ட மாத்திரத்தில் வாந்தியெடுக்க துவங்கினார்கள். எலும்பும் ,தோலுமாக மெலிந்து , உணவின்றி சாகத்துவங்கினார்கள்,     
பசி நோயை காஸ்காடகாமாவால் குணப்படுத்த முடியவில்லை. அனைவரும் இறந்துபோவதை அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். கரையை விட்டு கிளம்பிய முதலாம் வருடத்தில் எங்களில் இருநூறு பேர் மட்டுமே உயிரோடிருந்தோம். ஆனைவரும் இறந்ததால் ஆளில்லாமல் வந்துகொண்டிருந்த ஏழு கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதியும், திசைமாறிச்சென்றும் மூழ்கின.



                காஸ்காடகாமாவின் அசாத்திய நம்பிக்கை. நாம் நிச்சயம் கரை திரும்புவோம் என அவரை நம்ப வைத்தது. துணைக்கப்பல்கள் எதுவுமே இல்லாத நிலையில், இனி நாம் கண்டுபிடிக்கவேண்டிய தீவை அடைந்தாலும் உயிர்பிழைப்பது கஷ்டமென்பதை ரொம்பவும் தாமதமாக உணர்ந்துக்கொண்ட அவர். கப்பலை மீண்டும் வந்த வழியிலேயே செலுத்தும் ஆயத்தப் பணிகளில் இறங்கினார். 

வடக்கு காற்றடி காலம் துவங்க இன்னும் ஓரிரவு மீதமிருந்தது. தெற்கு எமக்களித்த இழப்புகள் போதுமென அவர் கருதியிருக்கக்கூடும்.காலையில் வடக்கு நோக்கி மீண்டும் பயணப்படவிருந்த போதிலும், இந்த பயணம் தோல்வியுற்றதற்கான காரணத்தை ஆராய குழுவொன்றை நியமித்தார்.

ஒழுங்கு நிலை நாட்டும் குழுவினரும் இதில் முக்கிய பங்காற்றினார்கள். முறையான வரைபடங்கள் இல்லாதது, அனுபவமில்லாத கடலோடிகள், உணவுபற்றாக்குறை ஊழியர்களின் அதீத கேளிக்கை, விளங்கிக்கொள்ளமுடியாத தெற்கு கடல்வழியின் தன்மை, இவற்றோடு சேர்த்து நானும் ஒரு காரணமாக சேர்க்கப்பட்டேன். 

 799 பேர் உடனடியாக ஒத்துக்கொண்ட கடல்பயணத்தை நான் தவிர்த்தற்கு ஏதோ காரணம் இருப்பதாக சாதித்தார்கள். அமானுஷ்ய தீவில் இறங்கியவர்களுக்கு தவறான வழியை சொல்லிகொடுத்து நான் தான் கொன்றதாகவும் முடிவெடுத்தார்கள். எல்லோரும் பயந்து உயிரிழந்த போதும் நான் சலனப்படாததற்கு காரணம் ஏதோ மாய மாந்திரீகமெனவும் அதை நான் மற்றவர்களுக்கு கற்பிக்காதது குற்றமெனவும் சொல்லிக்கொண்டார்கள்.

 கப்பலின் மேற்தளத்தில் கூடியிருந்த அனைவரின் விருப்பமும், எனக்கு தூக்குதண்டனை நிறைவேற்றி அதை குரூரமாக பார்த்து இரசிப்பதாக இருந்தது. 
 கடல் இறுதியாக அவர்களை இந்த மனநிலையில் விட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.


   என்னுடைய வாதங்கள் எதுவுமே எடுபடவில்லை.


  ஆதாரம் கேட்கிறார்கள், நானும், நம்பிக்கையே இல்லாத என் மனசாட்சியையும் தவிர எனக்கு ஆதரவாக அங்கு எதுவுமேயில்லை! நான் எங்கிருந்து ஆதாரத்தை கொணர்வது?

 விசாரணையின் முடிவில் காஸ்காடகாமா குரூரமாக சிரித்தான். அவனது உதட்டு விளிம்புகளில் மனிதக்கொழுப்பு ஒட்டியிருந்ததை என்னால் உணரமுடிந்தது. கூடியிருந்த ஊழியர்கள் அனைவரும் சத்தம் போட்டு சிரிக்கும் போது. அவர்களின் கண்களிலிருந்தும், குரூரம் தெறித்தது, மனிதம் புசிக்கும் வேட்கையை அவர்களுக்குள் கடல் நாங்கள் கரை திரும்பப்போகும் ஓரிரவிற்கு முன்னால்  விதைத்திருந்தது. 

 தூக்குமேடை தயார் செய்யப்பட்டு, எல்லோரும் கூடியிருந்து ஆரவாரத்துடன் என் தண்டனையை நிறைவேற்ற தயாரானார்கள். ஓராண்டுக்கு முன்னம் இவர்கள் கிளம்பும் போது அவர்களிடமிருந்த உற்சாகம் அவர்களிடம் இன்று மீண்டும் தென்பட்டது. கண்கள் மூடி அமைதி காத்திருந்த நான் என் விதியையும், என் ஒரே ஆதாரமான மனசாட்சியையும் எண்ணி நொந்துக்கொண்டேன்.

   தண்டனைக்கு ஒருநாழிகைக்கு முன்...

"இந்த ஒருநாழிகைக்குள் உன்னால் உன் குற்றத்தை மறுக்கும் ஆதாரத்தை தயாராக்கமுடியுமா"
எனக்கேட்டுவிட்டு வெடிச்சிரிப்பு சிரித்தான் காஸ்காடகாமா.

ஆட்டமும் கொண்டாட்டமும் கொஞ்சம் தீவிரமாக ஆரம்பித்த நொடியில். கடல் கோபம் கொள்ள ஆரம்பித்தது.ஒருகணம் கொதித்து அடங்கிய கடல் நீர், பின்வாங்கும் தோரணையில் சில அடிகள் உள்வாங்கியது.கடலெங்கும் இருக்கும் உயிரினங்கள் ஒருசேர ஒலிஎழுப்புவதைப்போல சகித்துக்கொள்ள முடியாத சத்தம் காற்றில் கூடிவிட்டிருந்தது.திடீரென கடல் சுழன்று சுமார் ஐம்பதடி உயரத்தில் எம்பி, கப்பலைக்கவ்வ ஆரம்பித்தது. நிலைத்தடுமாறிய கப்பல். சிறிது சிறிதாக மூழ்க ஆரம்பிக்க,கடல் சீற்றத்தில் மழை போல போழிந்த கடல் மீன்களும், பிற உயிரினங்களும் ஊழியர்களையும், காஸ்காடகாமாவையும் கடித்து குதறத்துவங்கின.

மிகப்பெரும் அளவு கொண்ட மீன் ஒன்று என் முன்னே விழுந்து சுதாரித்து. கை,கால்கள் கட்டப்பட்டிருந்த என்னை உண்ண ஆரம்பிக்க
 அப்போதும் சலனமற்றிருந்த என் ஆதாரமும் ,என்னிலிருந்து விடுபட்ட நானும் மௌனமாக அதைப் பார்த்தபடி வான் நோக்கி பயணப்பட ஆரம்பித்திருந்தோம். 

மரணம் எனப்படுவது யாதெனில்


இன்று என்னுடைய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள். நான் இன்றோடு வாழ்ந்திருக்கும் 9490 நாட்களோடு எனக்கு 26 வயது முடிவடைகின்றது என்பது மட்டுமே இந்த நாளின் சிறப்பல்ல! இந்த நூற்றாண்டில் கொண்டாட்டங்கள் என்பதே மழுங்கிவிட்டிருக்கின்றன.திருவிழா கிடையாது, திருமண வைபவங்கள் கிடையாது, ஊர் கூடி என்னமோ தேர் இழுப்பார்களாமே! எனக்காக நானே பார்த்துக் கொண்ட வரன் இன்று கைகூடியிருக்கிறது. திருமணம் என்பதே சிக்கலான ஒன்று , அரசாங்கத்திடம் கேட்டால் துணைக்கு ஒரு பெண் கிடைப்பாள், பிடிக்காவிட்டால் அனுப்பிவிடலாம், திருமணத்திற்கு தனியாக அனுமதி வாங்க வேண்டும். அப்படியே கஷ்டப்பட்டு வாங்கிவிட்டாலும் எந்த பெண்ணும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்வதில்லை, வெகு அரிதாக அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் பெற்றோர் அதை விரும்புவதில்லை. இப்படிப்பட்ட ஒரு பற்றற்ற நூற்றாண்டில் நான் மட்டும் தப்பி பிறந்திருக்கிறேன். எனக்கே எனக்காக ஒரு பெண், எங்களிருவருக்கும் ஒரே ஒரு குழந்தை! நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒன்றே ஒன்று தான்! அதை மீறினால் அரசாங்கத்தின் கடுமையான தண்டனை நிச்சயம்.


--------------------------------------------


நான் பார்த்த ஒரே திருமண வைபவம் என் அப்பா அம்மாவுடையது! அதுவும் என் வேலை சம்பந்தமாக என் ஸ்டோர் ரூமை குடைந்து கொண்டிருந்த போது கிடைத்த ஒரு தேய்ந்து போன காம்பேக்ட் டிஸ்கில் இருந்தது. உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த அந்த டிஸ்க்கிற்கு நவீன ரெக்கவரி சாஃப்ட்வேர் கொண்டு ப்ளூ ரே டிஸ்க்காக திரும்பவும் உயிர்கொடுத்தேன். என்னால் அது பிழைத்த காரணத்தினாலோ என்னமோ கைக்கு அடக்கமான அந்த சின்ன டிஸ்க் என் வாலெட்டிலேயே தங்கி விட்டது. அடிக்கடி அதை ஓடவிட்டு நான் ஏங்குவதுண்டு! ஆனால் இந்த அரசாங்கத்தில் திருமணம் என்பதை நினைத்தே பார்க்க முடியாது! மக்களுக்காக ஜனநாயகம் என்றிருந்த சூழ்நிலையெல்லாம் கப்பலேறி சுமார் நூறுக்கும் மேலான வருடங்களாகிவிட்டன. இது ஏதோ ஜனநாயகத்தின் நவீன வடிவமாம், டாக்டர் பிலிக்கர் , ஜனத்தொகை கட்டுப்படுத்தமுடியாமல் போய்விட்ட வேற்றுகிரகவாசிகள் இந்த ஜனநாயக முறைகளைத்தான் பின்பற்றுவதாக இந்த தியரியை முன்வைத்தார். நம்பித்தொலைக்க வேண்டிய கட்டாயம் பூமி கிரகத்திற்கு!


--------------------------------------------


  இன்று விடிந்ததிலிருந்தே அம்மாவின் கவனிப்பு அசாதாரணமாய் இருக்கிறது. எதையோ உணர்ந்துகொண்டவள் போல என்னையே சுற்றி சுற்றி வருகிறாள், விழுந்து விழுந்து கவனிக்கிறாள். பரிதவிப்போடு என்னிடம் பேசுகிறாள். உதடுகள் துடிக்க என்னென்னமோ பிதற்றுகிறாள். அதை பார்த்து வருத்தப்படும் உணர்வுகளை இந்த நூற்றாண்டு எனக்களிக்கவில்லை!


--------------------------------------------


  டாக்டர் பிலிக்கர் இந்த நூற்றாண்டில் அதிமுக்கியமான பிறவி! இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல, இந்த உலகம் தோன்றி உழன்று வந்திருக்கும் இத்தனை கோடி ஆண்டுகளுக்கும், இனி உலகம் இருக்கப்போகும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கும் சேர்த்து அவர்தான் முக்கியமான பிரஜை. நியூட்டன், எய்ன்ஸ்டீன் வகையறாக்கள் எல்லாம் சில்லறை கண்டுபிடிப்பாளர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். கடவுளின் இருப்பை இல்லாமல் செய்தது தான் இவர் செய்த சாதனை. ஆம் முக்கால் நூற்றாண்டு கடும் ஆராய்ச்சிகளின் விளைவாக மரணத்தை வென்றுவிட்டிருக்கிறார் பிலிக்கர்! 21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்த அதிசயத்தை இவர் நிகழ்த்தியிருக்கிறார்.மரணம் என்பதே இல்லை! உலகமெங்கும் ஜனத்தொகை பிதுங்கி வழிகிறது! வாழ்வின் முடிவிலா வெளிப்பயணத்தில் சிக்கி மனநிலை பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.அவர்களைகூட பிலிக்கரால் குணப்படுத்திவிட முடியுமென்றாலும் அரசாங்கம் அதை அனுமதிப்பதில்லை, மாறாக அவர்களை சைக்கோக்களாக சித்தரித்து கொன்றுவிடுகிறது.


--------------------------------------------


  ஆக மரணமற்ற இந்த உலகத்தில் புத்தி பேதலிக்காமல் வாழ்வதொன்றே சாகாமல் வாழ்வதற்கான வழி! திருமணங்கள் மக்களை பைத்தியம் பிடிக்க செய்கின்றன என மக்களே இணைந்து திருமணத்திற்கு எதிரான மசோதாவை கடுமையாக போராடி கி.பி 2634ம் வருடம் கொண்டுவரச்செய்திருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு  எதிரான கடைசி மக்கள் எழுச்சி இதுவே!



--------------------------------------------


நான் சொல்ல மறந்த இன்னுமொரு முக்கியமான விஷயம் அடியேன் நான் டாக்டர் பிலிக்கரின் பயிற்சி விஞ்ஞானிகளுள் ஒருவன், இந்த வாக்கியத்தை எழுதிய இரவின் மாலையில் பிலிக்கர் என்னுடைய கணக்கு வழக்குகளை முழுவதுமாக முடித்து வவுச்சரில் பிங்கர் பிரின்ட் வாங்கி கொண்டார், என்னுடைய சான்றிதழ்கள் அனைத்தையும் திரும்ப கொடுத்துவிட்டார். 


--------------------------------------------


 என்னை பதவி நீக்க சொல்லி அரசாங்கத்திடமிருந்து தகவல் வந்ததாக என் முன்னாள் சகஊழியனும் என் நெருங்கிய தோழனுமாகிய ஜேக்ஸ் ரகசிய தகவல் அனுப்பினான். நான் அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கும் ஒரு அதிமுக்கிய ரகசிய படுகொலைகளுக்கு எதிராக திரட்டிக்கொண்டிருந்த தகவல்களே இதற்கு காரணமாக சொல்லப்பட்டிருந்ததாம்.


--------------------------------------------  


  அரசாங்கம் ஆறு வாரத்திற்கொருமுறை களையெடுப்பை மேற்கொள்கிறது. அவர்கள் கொல்வதற்காக அரசாங்க பதிவேடுகளிலிருந்து பிரஜைகளை ரேண்டமாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த விவகாரம் அப்பட்டமாக பொதுமக்களுக்கு தெரியாவிட்டாலும் அவர்களை கொல்ல நம்பத்தகுந்த காரணங்களை அரசாங்கம் சாதுர்யமாக முன்வைத்து ஏமாற்றிவிடுவதால் மக்கள் முட்டாள்களாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது பிரச்சினை அதுவல்ல! மக்கள்தொகை பிதுங்கி வழியும் ஒரு கிரகத்தில் இந்தமுறை நிச்சயம் அவசியம்! இல்லாவிட்டால் பட்டினி பஞ்சத்தால் மனித இனமே அழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்! பணக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ,ஏழை எளியவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து கொல்லும் அரசாங்கத்தின் அயோக்கியத்தனத்திற்கு எதிராக நான் மேற்கொண்ட ரகசிய பிரசாரங்கள் என்னை களையெடுப்பு பட்டியலில் சேர்த்திருக்கிறது. 


--------------------------------------------

ஆம் ! என் உயிரை அரசாங்கம் எடுக்கப்போகும் விஷயம் மூன்று நாள் மீதமிருக்கையில் இன்று  தான் எனக்கு தெரியவருகிறது! எனக்கு சாவு குறித்து நிச்சயம் பயமில்லை. என் மரணத்திற்கு பிறகு போராட்டங்களை முன்னெடுக்க நான் ரகசியமாக ஒரு ஆளை தயார்படுத்தியிருக்கிறேன்! அது யார் எவர் எனும் விவரங்களை இங்கே எழுதி வைப்பது ஆபத்தாகிவிடும்!


--------------------------------------------


  நாளைக்கு எனக்கு சாவு தண்டனை. என்னுடைய கடைசி விருப்பங்களை பட்டியலிட சொல்லி உத்தரவு வந்திருக்கிறது. நிச்சயம் நான் பெண்சுகத்தை நாடப்போவதில்லை. ஒரே ஒரு முறை ஒரே ஒரு முறை என் அம்மா எனக்காக அழுவதை பார்க்க அனுமதிக்க கோரப்போகிறேன். நான் அழுகையை பார்த்ததே இல்லை!


--------------------------------------------


  நான் தனிமைபடுத்தப்பட்டுவிட்டேன்! என் அம்மா கண்ணாடி சுவருக்கு அப்பால் என்னை பார்த்தவாறே அழுதுக்கொண்டிக்கிறார். ஆத்ம திருப்தியோடு இந்த கடைசி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அரை மணியில் என்னை அழைத்துப்போகப்போகிறார்கள். என் போராட்டத்திற்காக நான் என்னையே இழக்கப்போவதை நினைத்தால் பெருமை பீறிடுகிறது.


--------------------------------------------


  கண்ணாடிசுவருக்கு அப்பால் என் அம்மா இன்னமும் அழுதுகொண்டிருக்கிறாள். சிறு புன்னகையோடு நான் அவளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் கண்ணில் ஒரே ஒரு துளி கண்ணீர் வழிகிறது. என்னை விஷவாயு அறைக்கு கொண்டு போக மூவர் வந்திருக்கிறார்கள். என்னிடமிருந்து இன்னும் ஐந்தாறு வினாடிகளில் இந்த டைரி பிடுங்கப்படலாம்.


--------------------------------------------


                            ..........திரு.ரோஹன் அவர்களின் சிதைந்து போன டைரியின் பக்கங்களிலிருந்து.

ஆல்புமின் பிரதேசம்


என்னால் இதற்கு மேல் உட்கார முடியவில்லை.....இலையை எடுத்து நார்நாராக கிழித்து சர்வர் மூஞ்சியிலேயே எறியலாம் போல இருந்தது....உச்சி வெயிலில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கூரை தகிக்க, காற்றாடி பொருத்தும் அளவுக்கு கூட தொழில்தர்மமற்ற அந்த கடையில் அரை மணிநேரம் காத்திருந்தது என் தப்பு தான்....மார்கழி குளிரில் மதியம் 12 மணி கூட லேசாக மக்கர் பண்ணும்....வெயிலில் நடந்தால் சூடேறும்,,,அதுவே நிழலில் அயர்ந்தால் குளிர்காற்று விஜயகாந்த் படத்தில் நகக்கண்ணில் ஊசிவிடுவதை போல படுத்தியெடுக்கும்...
ஆனால் இன்று எனக்கு இருக்கும் கோபத்தில் என் உடலிலிருந்து உமிழப்படும் உஷ்ணமே ஆம்லெட் போடுவதற்கும் , அடுப்பெரிப்பதற்கும் உதவியிருக்கும்....ஆனா பிழைக்க தெரியாத பயலுக எல்.பி.ஜியை எரியவிட்டு என் உடல் உஷ்ணத்துக்கு டஃப் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்....நேற்று மாலை ரெண்டே ரெண்டு இட்லி சாப்பிட்டது..அதன் பிறகு இரவு பத்து மணிக்கு ஒரே ஒரு டீ...அவ்வளவு தான்....நேராக எக்ஸாம் முடித்துவிட்டு சாப்பிட ஹோட்டல் தேடிய போது தான் இந்த ஹோட்டல் கண்ணில்பட்டது...அதுவும் என் நண்பனின் நொண்டி கண்ணுக்கு!
நகரத்துக்கு வெளியே அமைந்திருக்கும் கல்லூரி வளாகங்களின் ஹோட்டல்களில் வேலை பார்க்கும் சர்வர்கள் எல்லாருமே ஒரே மாதிரியான அமினோ அமிலத்திலிருந்து வந்திட்டார்களோ?? லிமிட்டட் மீல்ஸ் சொல்லி இத்தோடு 45நிமிஷமாயாச்சு.... லிமிட்டட் மீல்ஸ் எல்லாம் இப்போ தருவதில்லை ஒன்லி அன்லிமிட்டட் மீல்ஸ் என்று விளக்கினார் சர்வர்....நானெல்லாம் அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட ஆரம்பித்தால் அண்டார்ட்டிக்காவில் சன்ஸ்க்ரீன் லோஷன் விற்க வேண்டி வருமென நினைக்கையில் எனக்கே சிரிப்பு வந்தது....
விலையில் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்றாலும் தேவையில்லாமல் வாங்கி வீணடிக்க நான் விரும்பாதது தான்...அன்லிமிட்டட் மீல்ஸை நான் வெறுத்ததற்கு காரணம்.. ஆனால் என்னமோ வராத நோய் வந்தவனை ட்ரீட் பண்ணுகிற தொனியில் நடத்துகிறான்...இந்த சர்வ'ன்' .
4 பேர் புடை சூழ படையெடுத்த எங்களது படை மூன்று பேர் அன்லிமிட்டட் மீல்ஸில் நாட்டம் கொண்ட காரணத்தினால் ஒரு பெரும்படையாகவும், மற்றுமொரு சிறுபடையாகவும் பிரிக்கப்பட்டது. இரண்டாம் கேட்டகரியில் நான் மட்டுமெ இடம் பெற்றது தான் மொத்த ஹோட்டலும் உச்சு கொட்ட நேரிட்ட சோகம்.....ரத்தம் சரேல் புரேலென பாய்ந்து கொப்பளிக்க என் படையை சேர்ந்த மூவரும் புறங்கை முதற்கொண்டு நக்குவதை கொடூரம் கலந்த ஏக்கத்தோடு வெறிக்கிறேன்....சர்வ'ன்' என்னை இன்னமும் கண்டுகொள்ளவில்லை....விரிக்கப்பட்ட இலை கூட சூடு தாங்காமல் லேசாக வாடி விட்டிருந்தது...ஏனோ நான்...பொறுமையின் லிமிட்டை ஏகத்துக்கும் ஏற்றி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்....
                                                             *****************
ஹோட்டல்களில் தோசை ஆம்லெட் போடும் வினை தனி டிபார்ட்மெண்ட்.....தன்னிடம் வரும் ஆர்டர்களை அப்படியே செயல்படுத்தி தொழிலில் சின்சியாரிட்டி காட்டும் புரோட்டா மாஸ்டர் தான் அங்கே அதிகம் விளிக்கப்படுபவர்....அதிலும் மேக்கிங் ஆஃப் ஆம்லெட் இருக்கிறதே அது ரொம்பவும் கொடுமை....அடுக்கடுக்காக அடுக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நாலைந்தை எடுத்து படுகொலை செய்து, வெங்காயத்தை நறுக்கியிட்டு ,இன்னும் பல இத்யாதிகளை தூவி, சுடுகல்லில் ஆங்காங்கே பரவ விட்டு பெப்பர் தூவி....இப்படியாக நீளும் அதன் செய்முறை...என்ன தான் நானும் பறப்பவை நடப்பவைகளை சாப்பிடுபவனாக இருந்தாலும் , அந்த முட்டை மேட்டர் மட்டும் எனக்கு  அலர்ஜி.... ஒரே கல்லில் பலவற்றை போட்டு பொரித்தெடுக்கும், நடவடிக்கையாலோ, இல்லை அழுக்கு கையை கொண்டு கலக்கி ஆம்லெட் கரைசலை உருவாக்கும் மாஸ்டரின் தொழில் யுக்தியாலோ, இல்லை வேறு காரணங்களாலோ எனக்கு இந்த அலர்ஜி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் முட்டை சம்பந்தப்பட்ட உணவுகளை நான் தொடுவதில்லை என்பது தான் இந்த பாராகிராப்பின் நேரடி பாடுபொருள். அதுவும் பல துறை புத்தகங்களையும் பிரித்து மேயும் என் அண்ணன் ஒருவன் ஆம்லெட்டில் ஏலியன்கள் வாழ்வதற்கான சுவடு இருக்கலாமென கொளுத்தி போட்டிருந்தான். ஆரம்பத்தில் எனக்கும் அது முட்டாள்தனமாகத்தான் பட்டது.  ஆனால் மர்மங்கள் மானாவரியாக சூழ்ந்திருக்கும் இந்த உலகத்திலே நாம் எதைத்தான் திட்டவட்டமாக மறுத்துவிட முடியும்? எனும் கேள்வி ஒரு பௌர்ணமி இரவில் என்னில் உதித்ததிலிருந்து நானும் அதை பற்றி சிந்திக்க தொடங்கியிருந்தேன்.
                                                               ********************
தம்பீ...தம்பீ ....என் தோளைபிடித்து நாராசமாக உலுக்கினான் எவனோ ஒருவன். பார்த்தால் என் இனிய சர்வன்.    
    "ஆஃப்பாயில் கேட்டல்ல...இந்தா! என் பதிலை கூட எதிர்பார்க்காமல் இலையில் கிடத்தினான்...
     "நான் எப்போ ஆஃப்பாயில் கேட்டேன்?"
     "ஓஹ் நீ கேக்கலியா?? ஓகே பரவாயில்ல லிமிட்டட் மீல்ஸ் தானே சொன்ன?? அது போதாது  உனக்கு இதையும் சாப்பிடு!" 

 "ரொம்ப அக்கறை...இத எடுய்யா முதல்ல...சாப்பாடு கொண்டுவா முதல்ல" 

 "வெச்சாச்சே தம்பீ ...வேற யாரும் ஆஃப்பாயில் கேக்கல....யாருக்கும் குடுக்கவும் முடியாதே!"
 சுற்றிலும் பார்வையை சுழலவிட்டேன்...ஒருத்தனை கூட காணோம்! நடுத்தர வயது பெரியவர் ஒருவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரும் அதே கடையில் வேலை பார்ப்பவர். 

 "----------------------",முறைத்தேன்.
 "சாதம் ரெடியாகிட்டு இருக்கு , கொஞ்சம் பொறு" என அசால்ட்டாக சொல்லிவிட்டு நகர்ந்தான்.
 "டேய் அதை தானே ரெண்டு மணிநேரமா செய்துகிட்டு இருக்கேன் "என்று கத்திவிடலாம் போலிருந்தது. 

  நான் கத்தினாலும் 3 டெசிபலை தாண்டப் போகாத என் எனர்ஜி லெவலுக்கு ....இன்னும் இன்னும் பொறுமையாய் இருந்து எரிபொருளிட்டுக்கொள்வதை வேறு வழியே இல்லை....

 என் நிலையை நினைத்து பரிதாபப்பட கூட எந்த உயிரினமும் அங்கில்லை.ஆளே இல்லாவிட்டாலும் கல்லில் எதையோ வார்த்து வேக விட்டு பிஸியாக நின்று கொண்டிருந்தார் மாஸ்டர்.

                                       ************************************
கிட்டதட்ட ஆஃப்பாயில் சாப்பிடுமாறு சர்வ'னா'ல் மிரட்டப்பட்ட நான்.அதையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒருவேளை நான் மேற்சொன்ன அண்ணனின் கோட்பாடுகள் உண்மையாகிவிட்டால்?? அவர் சொன்னது மாதிரி பிரபஞ்சமெங்கும் பரவியிருக்க வாய்ப்புள்ள வேற்றுகிரக நண்பர்கள் இந்த ஆஃப்பாயிலிலும் இருந்துவிட நேரிட்டால்?? நான் சாப்பிட்ட பிறகு வயிற்றை கிழித்துக்கொண்டு வந்து குதித்தால்??
"ஸ்பீசிஸ்" படத்தின் காட்சிகள் என் கண் முன்னே விரிந்தன. என்னத்தான் நான் பசியில் இருந்தாலும், பசிக்கொடுமையால் முட்டை பொருளை சாப்பிட துணிந்தாலும் அது ஆம்லெட்டாக இருந்திருக்கலாம்!  நன்றாக வேகவாவது செய்திருக்கும். ஏலியன் என்ன ?? பாக்டீரியா ,கரப்பான்பூச்சி என சகலமும் செத்து மடிந்திருக்கும். ஆனால் இது ஆஃப்பாயில், முப்பதே வினாடி வேக வைத்தல் வினையில் கல்லின் சூடு கூட ஆஃப்பாயிலில் பரவியிருக்காது.அப்படியிருக்க என் பௌதிக அறிவும், பயாலஜி அறிவும் கான்ஃபரென்ஸ் போட்டு என்னை தடுக்கின்றன. 

ஒரு சிறு துண்டு இலையில் வைக்கப்பட்டிருந்த அந்த அரைவேக்காட்டு ஆல்புமின் பரவல் எனக்கு குமட்டலை கூட்டியது.
கீழே குனிந்து நன்றாக உற்றுபார்த்து இன்ச் பை இன்சாக ஆராய்ந்தேன்...எதுவுமே தென்படவில்லை. காதை தீட்டிக்கொண்டு ஏதாவது வினோத சத்தம் வருகிறதா என கவனித்தேன். அதுவும் இல்லை...மூன்றாவதாக கையில் எடுத்து அதன் வைப்ரேஷனைக் கொண்டு ஏலியன் இருப்பை கணிப்பது என முடிவு செய்தேன். அந்த சோதனையும் வெற்றிபெற்றால் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சி அங்கே நிகழ்வுற இருந்தது. மக்கள் கூடி நின்று "சதீஷ் ,கமான், கமான் என ஆர்பரிப்பது போல ஒரு ப்ரேமை. இலையோடு சேர்த்து கையிலெடுத்தேன். முகத்துக்கு நேரே கையை கொண்டு வந்து ஏதாவது மாறுதல் தெரிகிறதா என கவனித்தேன். ஆஃப்பாயிலின் மேல் தூவப்பட்டிருந்த பெப்பர் நெடி தாளாது... நான் பெருங்காற்றெடுத்து தும்ம, இலையோடு சேர்த்து சிதறி விழுந்தது. ஏலியன், கரப்பான்பூச்சி, பாக்டீரியா என எந்த சுவடுமற்ற ஆஃப்பாயில். 

வல்லானின் வாகனம்



   எக்ஸாம்...எக்ஸாம்...எக்ஸாம்...ஐயோஓஓஓஓஓஓஓஓஓ.......
தேர்வுகளை கண்டுபிடித்தவன் மட்டும் கையில கெடைச்சா.. பிழிஞ்சுருவேன்... என பல பேர் புலம்பி கேட்டிருப்பீர்கள்.பல பேர் பலவாறாக புலம்புவார்கள், ஆனால் கிடைத்த கேப்பில் படித்து படித்தே ஃபைனல் எக்ஸாமில்  எப்படியாவது நல்ல மார்க் எடுத்துவிடுவார்கள்.
ஆனால் நான் அந்த ரகம் இல்லை. தீயாக படித்தே தீரும் வேகத்தில் உட்காருவேன். எவனாவது ஏதாவது சின்ன விஷயத்தை கொளுத்தி போட்டால் போதும்... நானும் அதையே தீவிரமாக
சிந்தித்தபடி கடைசி வரை படிக்கவே மாட்டேன்...அன்றும் அப்படித்தான்....   
தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்கள் பற்றி  ஆரம்பித்தான் ஒரு சண்டாளன்...அவனுக்கு அது ரிலாக்ஸேசன் நேரம்.. அவன் தீபாவளி என்ன??   பொங்கல்,கிருஸ்துமஸ் என எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம் , ஆனால் நான்??    இன்னும் ஆரம்பிக்கவே இல்லை .அதற்குள் எனது "தீயாக படித்து விடும் லட்சியம்" பத்தே நிமிடத்தில் முடிவுக்கு வந்திருந்தது...ஒரு பத்து
நிமிஷம் அவனுக்கு கம்பெனி கொடுத்துவிட்டு படிக்கலாம் என்பது தான் என் கணக்கு.. ஆனால் இன்னமும்  ரிலீஸாகாத தீபாவளி ரீலை பிரித்து மேய்ந்து விட்டு அதை பெட்டிக்கும் அனுப்பிவிட்டு அனாயசமாக மீண்டும் புத்தக  கடலில் மல்லாக்க கவிந்தபடி சம்மர்சால்ட் அடித்துவிட்டான் அவன்....எனக்கு கவனம் குவியவா போகுது?? விடிந்தால்
எக்ஸாம் .....இன்னும் சரியாக எட்டரை மணிநேரம் தான் இருக்கிறது.பத்து நிமிடம் கூட படிக்காத பாடத்தை நாளைக்கு எப்படி எதிர்கொள்ளபோகிறேன்??எனக்கு சிரிப்பு வந்தது. இப்போது நான் சிரித்தாலும்,அழுதாலும்  கேட்பாரில்லை..எல்லோரும் புத்தக கடலில் பிசி. நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்?? என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. நானும் கொஞ்சம் போராடி பார்த்தேன் ஹ்ஹூம் இது வேலைக்காகாது.இந்த முறை என் மேல்
எனக்கே வெறுப்பு. குளிர்கால இரவாதலால் இறுக்கி அடைக்கப்பட்டிருந்த ஜன்னலை திறந்தேன்.லேசான தூறலால் ஈரப்பதம் ஊறிப்போயிருந்த  காற்று முகத்திலேறி குத்தியது.ஆங்காங்கே விளக்கெரியும் அந்த பத்தரை மணி நகரம் கூட என்னை பார்த்து ஏளனம் செய்து சிரிப்பது போல இருந்தது.தெருவில் கூட அவ்வளவாக ஆள் நடமாட்டம்
இல்லை....நிலவற்ற அந்த வானம் என்னிடம் என்னவோ சொல்ல விழைவது போலவே பட்டது எனக்கு...ச்சே இந்த எக்ஸாம் மட்டும் இல்லையென்றால் எப்படி ரசித்திருக்கலாம்??  மாடியிலேயே படுத்து ஒட்டி உறவாடியிருக்கலாமே..ஆனால் உண்மை வேறு....தேர்வற்ற நாட்களின் இரவு வானங்கள் என் கண்ணுக்கு பட்டதே இல்லை....எட்டு மணிக்கே தின்றுவிட்டு சரீரம் சாய்க்கும் பழக்கம் தான் காரணம்.எக்ஸாம் இல்லாத நாட்களின் 11மணியை நான் பார்த்ததே இல்லை.எக்ஸாம் புண்ணியத்தில் இன்றைக்கு அதாவது வாய்க்கிறது.
கதவை திறந்து மாடிக்கு வந்தேன்.நிச்சயம் இன்றைக்கு விசித்திரமான இரவு தான்....அந்த முக்கால்வாசி முடங்கிபோன நகரமும்.. எப்போதும் மர்மம் காக்கும் வானமும் இன்று வேறு மாதிரியாக தெரிகிறது எனக்கு....எல்லா வீட்டு ஜன்னல்களிலிருந்தும் என்னை பல கண்கள் நோக்குவது மாதிரியான உணர்வு...வானத்திலிருந்து ஒரு படையே
என்னை நோக்கி தாக்க காத்திருப்பது போன்ற அச்சம்...ஒரு வேளை இந்திரர்களை எதிர்த்த அதே அரக்கர்களாக இருக்குமோ?? எனக்கே சிரிப்பு வந்தது. வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தேன். முதல் ரிலாக்ஸேசன் செசனில் என்னோடு தீபாவளி கொண்டாடிய கிராதகன் அடுத்த சேப்டரை முடித்தவிட்டு அடுத்த திருவிழா கொண்டாட என்னை
தேடி வந்திருந்தான். இந்த முறை மண்ணை எந்த வடிவத்தில் அவன் போட போகிறானோ?? என்னருகில் நெருங்கி பக்கவாட்டில் நின்றான்.நான் அந்த இருளை ஊடுருவி அவன் கண்களை பார்த்தேன்.....தீபாவளி???? பொங்கல்??
ஹ்ஹூம் இந்த முறை வேறு ஏதோ வலுவான பிளான் வைத்திருக்கிறான்.
அவனே ஆரம்பிக்கட்டும் என விட்டுவிட்டேன். சற்று மௌனத்திற்கு பிறகு ஆரம்பித்தான்.
       "மச்சி அந்த நட்சத்திரத்தை பாரேன்" என்றான்.
யெஸ்...இந்த முறை வான சாஸ்திரம் போல....நல்லா சிக்கிட்டேன்.....அவன் துவைத்த துவையலில் எனக்கு வானம் நோக்கும் மனநிலை மாறிவிட்டிருந்தது. ஆனாலும் கடைசி வரை திருச்சி ஏர்போர்ட்டில் தூரத்தில் இறங்கி
கொண்டிருக்கும் விமானம் புளூட்டோ கிரகம் என அடம்பிடித்தான்.நான் எவ்வளவு சொல்லியும் அவன் அதை விமானம் என ஒத்துக்கொள்ளவே இல்லை.அவனுடைய 10 நிமிட ஓய்வு முடிவுற்ற நிலையில் என்னிடம் சொல்லிக்கொள்ளாமலேயே விடைபெற்றான். 
  எனக்கு வெறுப்பேறியது...என்னை எவ்வளவு நல்லா யூஸ் பண்றாங்க என நினைக்கும் போது.....எப்படி நான் காலை எக்ஸாம் எழுதப் போகிறேன்....அட்லீஸ்ட் வருத்தம் வர வேண்டும், இல்லை அழுகை?? ஹ்ஹூம் இன்னிக்கு என்னவோ ஆகிவிட்டது எனக்கு..ஒன்றுமே உறைக்காத ஜடம் போல குளிர் விறைக்க நிற்கிறேன்.....
கண்கள் சொருகிக் கொண்டு வந்தது...மதியம் 12 மணிக்கு சாப்பிட்டது.....12  மணிநேரமாகிவிட்டதால்...குளுக்கோஸ் அளவு குறைந்து கண்கள் இருட்டிக் கொண்டுவருகிறது....படிப்பு...படிப்பு...படிப்பு..பசி...பசி......பசி......
                                                   --------------------------------------------------------

சுமார் பத்து நிமிடமிருக்கும்.... நின்றபடியே கண்ணயர்ந்திருந்தேன்...சற்று சுதாரித்துக் கொண்டு மீண்டும் வானம் நோக்குகையில்...நீல நிறத்தில் ஒரு ஒளிக்கீற்று மின்னி மறைந்தது....எனக்கு பின்மண்டையில் சுளீரென்றது....வந்த தூக்கம் ,பசி எல்லாம் காணாமல் போய் எனர்ஜி லெவல் ஏகத்துக்கும் ஏறியிருந்தது.....சிலியரியை அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு பார்வை குவித்தேன்...
 மீண்டும் அதே கீற்று.........புள்ளியில் ஆரம்பித்து....
 நீளவாக்கில் விரிந்து நீலநிற......செறிவுடன்...எனக்கு ஹார்ட்பீட்  எகிறியது........
படப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்......நீளவாக்கில் விரிந்த ஒளி ஜூம் ஆகி என்னை நோக்கி வருவது போலவே
இருந்தது.......டிஸ்கஸ் த்ரோவில் எறியப்பட்ட தட்டு நம்மை நோக்கி வருவது போல....வேகமாக வர...வர..இட்லி போன்ற அந்த உருவத்தின் வேகம் குறைந்தது...மினுக் மினுக் விளக்குகளோடு சுமார் நாற்பதடி விட்டம் இருக்கும்....சுழலவும் இல்லை....புகையோ, நீராவியோ கூட வரவில்லை...கிட்டதட்ட அந்த இயக்கத்தை மிதத்தல் என்று சொல்லலாம்......கிளைடர் போல....
பக்கத்து வீடுகளின் விளக்குகள் கூட தானாகவே அணைந்துவிட்டன....திடீரென அந்த நீல ஒளியின் வீச்சு என்னை தாக்கியதை போலிருந்தது.....மெல்லிய மின்சாரம் தாக்கியது போல......உடலில் மெல்லிய வலி வேறு..........சுமார் நூறடியில் மிதந்த அந்த தட்டிலிருந்து இரண்டு உருவங்கள் இறங்கி மிதந்தன.....கண்கள் இல்லை....கழுத்து சூம்பி
போய்...பயமுறுத்தும் உருவம்.....என்னால் சத்தம் போட முடியவில்லை....வாயை திறக்கவே முடியவில்லை.....என்னை அப்படியே தூக்கிக் கொண்டு பறக்கும் தட்டுக்குள் கொண்டு சென்றன.....என்னால் பேச முடியாவிட்டாலும் பார்க்க முடிந்தது...ஒரு அறையில் என்னை சாய்வாக படுக்க வைத்தார்கள்....என்னால் டெலிபதி மூலமாக அவர்களை
தொடர்பு கொள்ள முடிந்தது.....
  "ஏன் என்னை தூக்கி வந்தீங்க"  

பதிலில்லை.....

ஆனால் அவர்களுக்குள் என்னவோ டெலிபதியில் தகவல்களை பறிமாறிக்கொண்டார்கள்..

என் உடலில் என்னவோ சோதனை செய்தார்கள்..எண்டோஸ்கோப்பி போன்ற ஒரு கருவியை எனது காதுக்குள் விட்டு மூளையை தொட்டார்கள். என்னென்னவோ மாற்றங்கள். அவர்களின் தேவை மனித இனத்தை சோதனை செய்வதாக இருக்கும்..
ஆனால் என் மூளையில் ஏதேதோ மாற்றங்கள்..ஒருவித சல்ஃபர் நெடி மூக்கை துளைத்தது..... சீக்கிரமே முடித்து விட்டார்கள்....என்னை அப்படியே சுளுவாக தூக்கி வந்து என் வீட்டு மாடியில்
விட்டுவிட்டு....பறக்கும் தட்டில் தவ்வி ஏறி கண நேரத்தில் மறைந்தது பறக்கும் தட்டு....அவ்வளவு நேரமும் செயலற்று கிடந்த நான் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தேன்.....உடலில் ஏதேதோ மாற்றங்கள்...காதில் வினோத சப்தங்கள்.... நீல
ஒளி இன்னமும் அந்த இடத்தில் நீடித்தது....வேகமாக ஓடி போய்.... நண்பர்களை கூட்டிக் கொண்டு ஓடிவந்தேன்.....நான் காட்டிய இடத்தில் ஒன்றுமே இல்லை....ஏமாற்றமே மிஞ்சியது....ஆனால் ஒளிபட்ட இடங்களில் சூடு இன்னமும் போகவில்லை...அதை தொட்டு காட்டி விளக்க முற்பட்டேன்...அவர்கள் என்னை கவனிக்காமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டு ஒருமாதிரியாக சிரித்தார்கள்.....தலையில் அடித்துக் கொண்டு இறங்கி போய்விட்டார்கள். நான் என்ன செய்ய முடியும்.
மணி 4.....

புத்தகத்தை எடுத்தேன்....முதல் பக்கத்தை திறந்தேன்.. என்ன ஆச்சரியம் ஒருபக்கத்தை பார்த்தமட்டிலேயே என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்தது!!!!......சரசரவென ஸ்கேன் செய்யும் தொனியில் பார்த்து மனதில் ஏற்ற முடிந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.....கண்கள் அகல முழு புத்தகத்தையும் ஸ்கேன் பண்ணிக் கொண்டு
படுத்துவிட்டேன்.....
                                              ---------------------------------------------------------------------
10மணி...


கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது.....எனக்கு இப்போது இதை பார்க்க ஏளனமாக இருந்தது.....

நமக்கு இருக்கும் அறிவுக்கு இவ்வளவு ஈசியான கேள்விகளா??
எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன்....

கொஞ்ச நேரம் மற்றவர்களின் முகங்களை நோக்கினேன்...

நைட்டெல்லாம் படித்த நண்பர்கள் திருதிருவென
விழிக்கிறார்கள்.....எனக்கு ஒரே சந்தோசம்...


பேனாவை திறந்தேன்... பார்ட்-A என எழுதினேன்...


என் பார்வை பட்டதுமே பேனா மை ஆவியாகி காணாமல் போனது.....

"பசீகரன்" என்னும் கடவுள்

                                                   "பசீகரன்" என்னும் கடவுள் 



   

கி.பி.2167,  நள்ளிரவு தாண்டி 1.31 மணி...

  டாக்டர் பசீகரன் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்..

இம்முறையும் தோல்வி..சக்ஸஸ் காம்பினேஷன் வரும் என பார்த்தால் சல்ஃபியூரிக் ஆசிட் ஃபார்ம் ஆகும் போது ஏற்படுவது போல ரியாக்டரிலிருந்து புகை தான் வந்தது கரும் நிறத்தில்.

இது நிச்சயம் ஒரு கொடுமையான தருணம் தான் அவருக்கு.இருக்காதா பின்னே....இந்த நவம்பர் மாதத்தின் 18ம் நாளின் 28வது முயற்சி இது...அதுவும் சாதாரணமானதில்லை.
 டோகோடிரினால்ஸ் எனப்படும் ஒருவகையான  கெமிக்கல்   கொழுப்பில் மட்டுமே கரையக்கூடியது. இதையும் வேறு சிலவற்றையும் சேர்த்து மனிதன் கரையவே கூடாத மருந்தை கண்டுபிடிப்பது தான் டாக்டர் பசீ விரும்பி  ஏற்றுக்கொண்டிருக்கும் அசைன்மெண்ட்.

ஆம் மனிதனின் சாவை தடுத்து நிறுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியின் இருபத்தியெட்டாவது படியில் தான்  பசீகரனுக்கு இந்த சோர்வு.

 குளிர் கூடிப்போய்விட்ட அந்த பின்னிரவில் ஏ.சி யை குறைத்து வைக்க கூட அவருக்கு நேரம் இருக்கவில்லை.
 குளிர் தாங்காமல்  நடுங்கிக்கொண்டே  VIRTUAL மானிட்டரை பார்த்துக்கொண்டிருந்தார் சற்று முன் வரையிலும்.
இப்போது தான் அதுவே உறைக்கிறது..
நாற்காலியை மெதுவாக சுழற்றி பக்கவாட்டில் திரும்பி உட்கார்ந்து கொண்டார்.
கெமிக்கல்ஸ் புகைந்து போய் மானிட்டரில் AN ERROR OCCURED என டிஸ்பிளே
ஆவதை இம்முறையும் அவரால் தாங்க முடியவில்லை..

தன்னெதிரே இருக்கும் ஆளுயர கண்ணாடியில் தனக்கு பின்னாலிருக்கும் மேஜையில்
வைக்கப்பட்டிருக்கும் இட்லி தட்டு பிரதிபலிக்கிறது. மாலை 9 மணிக்கு வைக்கப்பட்ட டிபன் இன்னும் அப்படியே இருக்கிறது என்ற உணர்வு கூட இல்லாமல்  ரிஃப்ளக்ஷன் தியரியை பற்றிய யோசனையில் அவர் ஆழ்வது அவருக்கு புதிதல்ல.அதுவும் இட்லி, இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும்,21ம் நூற்றாண்டு நிறைவு
பெறும் வரையிலும் தமிழ்நாட்டில் சக்கை போடு போட்ட உணவு என இன்று காலையில் தான் தனது Z-PADல்  சண்டே ஸ்பெஷல் ஆர்டிக்கிள் ஒன்றை   படித்திருந்தார். அதை செய்து தர வேண்டி அவர் அம்மாவிடம் சண்டைபோட்ட போது அம்மாவே ஆடித்தான் போய்விட்டார்.ஒரு வழியாக தன் மகனை பிடித்த
லேப் டெக்னீஷியன் விமலாவின் பேய் விலகி விட்டது என நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டார். கஷ்டப்பட்டு அதன் ரெசிபியை நெட்டில் தேடி எடுத்து   இட்லியை செய்யும் வரை கூடவே நின்றிருந்த பசீகரன் "வேதாளம்" எட்டு மணிக்கே முருங்கைமரம் ஏறிவிட்டதில் அம்மாவுக்கு வருத்தம் தான் ஆனால் இப்போது
பசீகரனுக்கு இட்லி  பெரிய பிரச்சினையாக தெரியவில்லையே.

எட்டு மணிக்கு லேப்பில் நுழைந்தவுடனேயே சிஸ்டம் மானிட்டரில் தோன்றிய பசீ-யின் ப்ரொபசர்
டோரா தான் பிரச்சினை. பரிகாசம் செய்து சிரிக்காத குறையாக உன்னால் அந்த மெடிசினை கண்டுபிடிக்கவே முடியாது என சவால் விட்டிருந்ததில் இட்லிக்கான   ப்ரையாரிட்டி காணாமல் போயிருந்தது. டோரா என்று செல்லமாக அழைக்கப்படும் டோரா புஜ்ஜி தான் பசீகரனின் ப்ரொபசர். சீரியஸாகவே ரொம்பவும்
வில்லத்தனமான ஆள். தன் மாணவன் சாதிப்பதை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வில்லன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பசீகரனுக்கு ரோபாடிக்ஸ் தான் எல்லாமே. ஆரம்பத்தில் ரொபோட்டிக் ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டிருந்தார்.ஆனால் என்ன தான் கஷ்டப்பட்டு ரோபோவை உருவாக்கினாலும்
அதை  இந்த டோரா புஜ்ஜி நிராகரித்துவிட்டு பேரீச்சம்பழம்,இதயம் அது இது என டயலாக் பேசுவது போல அடிக்கடி கனவு வந்து தொல்லை கொடுத்தது.
அதனால் தான் அதுவரையிலும் ரோபோவை உருவாக்குவதற்காக வாங்கி வைத்திருந்த 4 DC மோட்டார், சார்ஜ் பண்ணுவதற்கு வாங்கி வைத்திருந்த 5
டுயூரோசெல் பேட்டரி போன்றவற்றை கொண்டு போய் எடைக்கு போட்டு விட்டு நிஜமாகவே LION DATES வாங்கிவந்துவிட்டார். ரோபோட்டிக்ஸ் துறைக்கு
அத்தோடு முழுக்கு போட்டுவிட்டு அன்று மாலையே கெமிக்கல் எஞ்சினியரிங்குக்கு தேவையான புத்தகங்களை வாங்கி எண்ணி ஆறே மாதத்தில் கெமிக்கல்
துறையில் விற்பன்னர் ஆகியிருந்தார். இதெல்லாம் நடந்தது கடந்த சம்மரில். கெமிக்கல் படித்து விட்டால் மட்டும் போதாதே. டோராவுக்கு முன் சாதித்து காட்ட
வேண்டுமே. அதனால் தான் இட்லியை கூட மறந்து விட்டு 9 மணியிலிருந்து இந்த போராட்டம். இதற்காக சாகா மருந்தை அவர் தேர்ந்தெடுக்க காரணம் அது
தன்னால் முடியும் என உறுதியாக நம்பியதால்.
  மணி 3 ஐ தொட்டு விட்டிருந்தது. மீண்டும் மானிட்டரை பார்த்தார். கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்ட இடைவெளியால் மனது லேசாகியிருந்தது எழுந்து நின்று
கை கால்களை ரிலாக்ஸ் ஆக்கி கொண்டார். மீண்டும் ஒருமுறை ரியாக்டரை சுத்தம் செய்துவிட்டு கெமிக்கல்களை நிரப்பி . இம்முறையும் தோற்றுவிடக்கூடாது
என்ற பயத்தில் கவனமாக ஆபரேட்டிங் கண்டிஷன்களை சரிபார்த்துக்கொண்டார்.ரியாக்டரை சீல் செய்து விட்டு 36 நிமிடங்களுக்கு டைம்-ஐ செட் செய்தார்.                           

    மீண்டும் ஒரு ரிலாக்ஸ் செஷன்.  

 இந்நாட்களில் விஞ்ஞானம் தான் எவ்வளவு முன்னேறிவிட்டது?

 அதிகபட்சம் மருத்துவத்துறையை எடுத்துக் கொண்டால் கேன்சரெல்லாம் சாதாரணம்.எய்ட்ஸெல்லாம் ஜுஜுபி. சூழ்நிலையும் அப்படி மாறிவிட்டிருந்தது. இப்போதெல்லாம் மழையில் நனைந்தாலே கேன்சர் பிடிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மழையில் நனைந்தாலே  கேன்சர் பிடிக்கிறது என்றாலும் மழை வருடத்துக்கு ஒரு முறை தான் பெய்கிறது. கேன்சரை எளிதாக
குணப்படுத்திவிடவும் முடிகிறது. ஆனாலும் கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு வலியோடு கூடிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அது தான் கொஞ்சம் சிரமம்.

 பசீகரனுக்கும் கேன்சர் தான். கடந்த மாதம் பெய்த மழையில் நனைந்ததால் ஒட்டிக்கொண்ட கேன்சர்.இப்போது சிகிச்சையின் இரண்டாம் மாதத்தில் இருக்கிறார்.

 அடிக்கடி வலி ஏற்பட்டு தொல்லை கொடுக்கும்.வலியை மட்டும் பொறுத்துக் கொண்டால் இதுவும் ஒரு பெரிய பிரச்சினை கிடையாது.
ஆக மொத்தத்தில் இது தான் இப்போது இருக்கும் அதிகபட்ச ஹார்ம்ஃபுல் நோயே.

இதற்கு மேலும் ஒரு நோய் கிடையாது.   

 பசீகரனின் அறையில் ஒரு காலண்டர் உண்டு. அவரது ஆருயிர் நண்பன் சட்டி என்பவரின் ஏஜென்சி விளம்பரம் அடங்கிய டிஜிட்டல் PAD.
சட்டி தனது ஏஜென்சி மூலம் ரோபோக்களை ஆர்டரின் பேரில் டோர் டெலிவரி செய்கிறார். ரெயில்வே கரண்ட் பேனலின் வயரை எடுத்து தனது இடுப்பில் செருகி தானாகவே சார்ஜ்
செய்துக்கொள்ளும் மோஸ்ட் அட்வான்ஸ்டு ரோபொக்களை பற்றிய விளம்பர வாசகங்கள் அந்த டிஜிட்டல் பேடில் வந்து போகும். அதில் ஒரு மூலையில்
HOROSCOPE போன்றவற்றை பார்த்துக்கொள்ளும் வசதியும் உண்டு. இன்னொரு ஸ்பெஷல் விஷயம் அதில் இடம்பெற்றிருக்கும் டெத் மீட்டர்.
நமது உள்ளங்கயை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது சாவு நாளை தீர்மானித்து விடும் அந்த மீட்டர். கவுண்ட் டவுன் டைமர் மூலம் சாவு தேதியையும்.
நாம் மேற்கொண்டிருக்கும் நோய்சிகிச்சை பற்றிய விவரங்களையும் காட்டும். நாம் மருந்து சாப்பிட மறந்தாலும் கூட தானாகவே வாலன்டியராக நமது Z-PADக்கு
தகவல்களை அனுப்பி ஞாபகப்படுத்தும்.
 அது தான் இப்போது பசீகரனின் கண்ணில் படுகிறது.    ஏற்கனவே தனது கையை ஸ்கேன் செய்திருந்ததால் தனது வாழ்நாள் இன்னும்
              
 67 years 2 months 22 days 4 hours 12 minutes 56 seconds  என ஸ்கிரீனில் காட்டியது .விநாடிகள் குறைய குறைய முன்பெல்லாம்
பயமாக இருக்கும் பசீகரனுக்கு. ஆனால் இன்று அது துச்சமாக தெரிகிறது. ஏளனப்பார்வை பார்த்தான்.    பக்கத்திலிருந்த DISEASE DIAGNO METER பசீகரனுக்கு கேன்சர் குணமாக இன்னும் ஒன்றரை மாதங்கள் இருப்பதாக காட்டியது. இன்றிரவு டேப்லட்
எடுத்துக்கொள்ளாததையும் ஒரு ஃப்ளாஷ் மெசேஜாக காட்டி பிளிங்க் ஆகிக் கொண்டிருந்தது.
   பீப்...பீப்...பீப்... 

அரை மணிநேர இடைவேளையில் அண்டார்டிக்கா பாலைவனத்தில் GUITAR ஐ வைத்து டூயட் பாடிக்கொண்டிருந்த  பசீகரன் பீப் ஒலியால் கவனம் கலைந்து
ரியாக்டரை நோக்கினார்.
PRODUCT FORMED, REACTION SUCCESS ,PERFECT CONDITION  எனக் காட்டியது VIRTUALஸ்கிரீன்.
பசீ-யால் நம்பவே முடியவில்லை...சந்தோசத்தில் கத்தியே விட்டார். அங்குமிங்கும் ஓடினார். ஒருமுறை கிள்ளிபார்த்துக் கொண்டார்.
அவர் போட்ட ஆட்டத்தில் மேசையிலிருந்த இட்லி கீழே விழுந்து சிதறியது. தாமதிக்காமல் ரியாக்டரை திறந்தார். ஃபார்ம் ஆகியிருக்கும் மனிதம் காக்கும்
மருந்தை எடுத்து பார்த்து சந்தோசப்பட்டார்

.புரொபசர்  டோரா புஜ்ஜியின் ஃபோட்டோவை சிஸ்டம் மானிட்டரில் பிரவுஸ் செய்து எடுத்து விரலால் கொக்கி காட்டி  பழிப்பு காட்டினார்.

இனி மனிதனுக்கு இறப்பே கிடையாது...நான் தான் கடவுள்.. என் சிலையை தான் மக்கள் வீடுகளில் வைத்து சேவிக்க போகிறார்கள் என கத்திக் கொண்டே துள்ளி
குதித்தார்.
ஆனால் சோதித்து பார்க்க வேண்டுமே.....உடனடியாக எப்படி சோதித்து பார்ப்பது??

மணி அதிகாலை 4..

.இந்த நேரத்தில் யாரை போய் தேடுவது???

பேசாமல் தனக்கே சோதித்து பார்த்து விட முடிவெடுத்தார். 

மருந்திலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக்கி மனதை திடப்படுத்திக்கொண்டு பல்லில் படாமல் விழுங்கினார்.

தொண்டை எரிச்சலெடுத்தது.
 அது  வயிற்றுக்கு போய் சேரும் வரையிலும் நெருப்புத்துண்டை விழுங்கியது போலிருந்தது. வயிற்றுக்குள் ஏதேதோ மாற்றங்கள்....

களுக்...முளக்...டபக்....டனால்...

எல்லாம் அடங்கியாயிற்று. வயிறு நார்மலாகி விட்டது.
ஒருவித புது தெம்பு வந்திருந்தது. சாப்பிடாததால் ஏற்பட்டிருந்த சோர்வு கூட இப்போது இல்லை....

ஆனால் சாவு கிடையாது என்பதை எப்படி சோதித்து பார்ப்பது??

இருக்கவே இருக்கிறது சட்டியின் டிஜிட்டல் PAD....அதை நோக்கி ஓடினார்...

தனது உள்ளங்கையை பதித்தார்....

 PAD ல் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்தன ஒரு நிமிடம் ஸ்கிரீன் அணைந்து விட்டது....

 சிறிது நேரத்தில்  எஞ்சியிருக்கும் வாழ்நாட்களை காட்டிக்கொண்டிருந்த டைமரில்             

உங்கள்   வாழ்நாள் இன்னும்______ "INFINITE" நாட்கள் உள்ளன என

காட்டியது. "வெற்றி...வெற்றி ...வெற்றி...

.நான் தான் கடவுள் எனக் கத்திக்கொண்டே 

 DISEASE DIAGNO மீட்டரை நோக்கினார்.

  உங்கள் கேன்சர் குணமாக இன்னும் _________"INFINITE" நாட்கள் உள்ளன என்றிருந்தது.